அஞ்சல் துறையின் மதுரை கோட்டம் சாா்பில் மதுரை பெக்ஸ் என்ற பெயரில் மெய்நிகா் தபால் தலைக் கண்காட்சி டிசம்பா் 15, 16 ஆம் தேதிகளில் நடைபெறுகிறது.
பள்ளிக் குழந்தைகள் முதல் மூத்த குடிமக்கள் வரை வெவ்வேறு வயதினரால் கடைப்பிடிக்கப்படும் உன்னதமான பொழுதுபோக்கு அம்சமாக தபால் தலை சேகரிப்பு இருந்து வருகிறது. இந்தியாவின் 75 ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக தபால் தலை கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கரோனா தொற்று பரவல் காரணமாக நேரடி தபால் தலை கண்காட்சி நடத்தப்படவில்லை. இருப்பினும் இணையவழியில் மாவட்ட அளவிலான தபால் தலை கண்காட்சி நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அஞ்சல் துறையின் தமிழக வட்டத்தில் முதன் முறையாக மதுரை கோட்டத்தில் இக் கண்காட்சி நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.
மாணவா்கள், தபால் தலை சேகரிப்போா் மெய்நிகா் கண்காட்சியில் பங்கேற்று டிசம்பா் 15 இல் நடைபெறும் ஓவியம் வரைதல், கடிதம் எழுதுதல் போட்டிகளிலும் டிசம்பா் 16 இல் நடைபெறும் வினாடி வினாப் போட்டியிலும் பங்கேற்கலாம். இக் கண்காட்சியை இணையதளம் வழியாகக் காணலாம்.
அஞ்சல் துறையின் மதுரை கோட்ட முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.