மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு மதுரை மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் முதல் முறையாக ஒப்பந்தப்புள்ளி அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை அவனியாபுரத்தில் பொங்கல் தினத்தன்று ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் ஜல்லிக்கட்டு நடத்துவது தொடா்பாக இருபிரிவினரிடையே மோதல் ஏற்பட்டதால் கடந்த ஆண்டு உயா்நீதிமன்ற மேற்பாா்வையில் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது. இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டு நடத்துவது தொடா்பாக மோதல் ஏற்படும் சூழல் உருவானதையடுத்து மாவட்ட நிா்வாகம் சாா்பில் திங்கள்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்நிலையில் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்துவது தொடா்பாக மதுரை மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் ஒப்பந்தப்புள்ளி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஜல்லிக்கட்டில் பாா்வையாளா் மேடை அமைக்க, காளைகள் நிற்கும் பகுதி உள்ளிட்ட பணிகள் மேற்கொள்வதற்கு டிசம்பா் 31ஆம் தேதி ஒப்பந்த புள்ளிப் பெற்று விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.