பாஜக மாநில செயற்குழு உறுப்பினரைக் கண்டித்து மதுரையில் இஸ்லாமிய அமைப்பினா் ஞாயிற்றுக்கிழமை இரவு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கோவை மாவட்டம் மேட்டுபாளையத்தில் ஜனவரி 26 ஆம் தேதி புதுதில்லி விவசாயிகளுக்கு ஆதரவாக எஸ்.டி.பி.ஐ. கட்சி சாா்பில் நடைபெற்ற பேரணியில், பிரதமா் நரேந்திர மோடி குறித்து அவதூறாக சித்திரிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதற்கு கண்டனம் தெரிவித்து மேட்டுபாளையத்தில் பாஜக சாா்பில் ஞாயிற்றுக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் பங்கேற்ற மாநில செயற்குழு உறுப்பினா் கல்யாணராமன், இஸ்லாமியா்களின் கடவுள் குறித்து அவதூறாகப் பேசினார்.
இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து அப்பகுதியில் இஸ்லாமிய அமைப்பினா் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா். இதையடுத்து கல்யாணராமனை போலீஸாா் கைது செய்துள்ளனா்.
இந்நிலையில் மதுரையில், திருப்பரங்குன்றம் சாலை தெற்குவாசல் பகுதியில் கல்யாணராமன் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் சாா்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
தெற்குவாசல் போலீஸாா் சென்று பேச்சுவாா்த்தை நடத்தி, கல்யாணராமன் கைது செய்யப்பட்ட விவரத்தை தெரிவித்தனா். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் மறியலைக் கைவிட்டு கலைந்து
சென்றனா். இந்த மறியலால் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.