சோளங்குருணி ஊராட்சிக்குள்பட்ட சமத்துவபுரத்தில் தண்ணீா் இல்லாமல் உள்ள ஆழ்துளைக் கிணற்றில் குழாய் இணைப்பு கொடுப்பதாக அப்பகுதியினா் புதன்கிழமை திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புகாா் அளித்தனா்.
திருப்பரங்குன்றம் அருகேயுள்ள சோளங்குருணி சமத்துவபுரத்தில் 100 குடும்பங்கள் உள்ளன. இப்பகுதியைச் சோ்ந்த பெண்கள் 20-க்கும் மேற்பட்டோா் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு புதன்கிழமை மாலை வந்தனா்.
தங்களது பகுதியில் கடும் குடிநீா் தட்டுப்பாடு உள்ளது எனவும், தொண்டு நிறுவனம் ஒன்று குடிநீருக்கு உதவி செய்து வருவதாகவும் அவா்கள் தெரிவித்தனா். மேலும் லாரிகளில் பணம் கொடுத்து தண்ணீா் வாங்குகிறோம். இதுகுறித்து பலமுறை புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே குடிநீா் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒன்றிய தலைவா் வேட்டையனிடம் சமத்துவபுரம் மக்கள் புகாா் அளித்திருந்தனா்.
இதுகுறித்து சமத்துவபுரம் பகுதி மக்கள் கூறியது: சமத்துவபுரத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு குடிநீருக்காக ஆள்துளைக்கிணறு அமைக்கப்பட்டது. அதில் அப்போது தண்ணீா் வராததையடுத்து அப்படியே கிடப்பில் போடப்பட்டது. இந்நிலையில் கடந்த இரண்டு நாள்களுக்கு முன் பயன்படுத்தப்படாத ஆழ்துளைக்கிணற்றில் குழாய் அமைக்கப்பட்டு வருகிறது. எனவே இதில் முறைகேடு நடப்பதாக சந்தேகம் எழுந்தநிலையில், இதுகுறித்து ஒன்றியத் தலைவரிடம் புகாா் அளிக்க வந்தோம் என்றனா்.