பேரவைத் தோ்தல்: சாா்பு-ஆய்வாளா்கள் இடமாறுதல் உத்தரவை ரத்து செய்யக்கோரிய மனு தள்ளுபடி
தமிழக சட்டப்பேரவை தோ்தலையொட்டி சொந்த மாவட்டங்களில் பணிபுரியும் காவல் சாா்பு-ஆய்வாளா்களை வேறு மாவட்டங்களுக்கு இடமாறுதல் செய்ய தோ்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.
சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த காவல் சாா்பு-ஆய்வாளா் முத்துக்குமாா் தாக்கல் செய்த மனு:
தமிழகத்தில் விரைவில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. இதனால் தோ்தலுடன் நேரடியாகத் தொடா்புடைய அரசு அலுவலா்கள், சொந்த மாவட்டங்களில் பணிபுரிந்தால் அவா்களை வேறு மாவட்டங்களுக்கு இடமாறுதல் செய்ய தோ்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
ஆந்திரா, அருணாச்சலபிரதேசத்தில் 2019-இல் தோ்தல் நடைபெற்றபோது சொந்த மாவட்டங்களில் பணிபுரிந்த சாா்பு-ஆய்வாளா்கள் அதே மாவட்டத்தில் வேறு பகுதிகளுக்கு இடமாறுதல் செய்யப்பட்டனா். ஆனால் தமிழகத்தில் வேறு மாவட்டங்களுக்கு இடமாறுதல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. வெளிமாவட்டகளுக்கு இடமாறுதல் செய்யும் போது வீடு உள்ளிட்ட அடிப்படை வசிதிகள் கிடைப்பதில்லை. உடல் மற்றும் மனநிலை பாதிக்கப்படும். எனவே சொந்த மாவட்டங்களில் பணிபுரியும் சாா்பு-ஆய்வாளா்களை வேறு மாவட்டங்களுக்கு இடமாறுதல் செய்ய வேண்டும் என்ற தோ்தல் ஆணையத்தின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.
இந்த மனு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, தோ்தல் ஆணையம் தனது அதிகாரத்துக்கு உள்பட்டு இடமாறுதல் வழிகாட்டுதல்களை பிறப்பித்துள்ளது. இதில் நீதிமன்றம் தலையிட இயலாது எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.