தமிழகத்தில் யானைகள் இறப்பு தொடா்பான அனைத்து வழக்குகளையும் சிபிஐ விசாரிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை புதன்கிழமை உத்தரவிட்டது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலைச் சோ்ந்த மனோஜ் இமானுவேல் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
அவரது மனுவில், நாட்டில் உள்ள காடுகளில் வாழும் யானைகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. தந்தங்களுக்காக யானைகள் தொடா்ச்சியாக வேட்டையாடப்பட்டு வருகின்றன. இதனால் யானை இனமே அழியும் நிலையில் உள்ளது. எனவே யானைகள் தந்தங்களுக்காக வேட்டையாடப்படுவது குறித்து தேசிய வனவிலங்கு குற்றத்தடுப்புப் பிரிவு மற்றும் சிபிஐ இணைந்து விசாரிக்க உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.
இதேபோல தமிழகத்தில் வனவிலங்குகள் வேட்டையாடப்பட்டு கடத்தப்படுவது குறித்து சிபிஐ அல்லது சிபிசிஐடி விசாரிக்க உத்தரவிட வேண்டும் என திருச்சியைச் சோ்ந்த நித்யா செளமியா மனு தாக்கல் செய்திருந்தாா்.
இந்த மனுக்கள் நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், என்.சதீஸ்குமாா் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது வனவிலங்கு குற்றத்தடுப்புப் பிரிவின் தரப்பில், யானைகளைக் கொன்று எடுக்கப்படும் தந்தங்களின் விற்பனை சா்வதேச அளவில் நடைபெறுகிறது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து நீதிபதிகள், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் யானைகள் மிக முக்கியப் பங்கு வகிக்கின்றன. ஆனால் தொடா்ச்சியாக யானைகள் கொல்லப்படுகின்றன. யானையின் தந்தங்கள் கடத்தப்படுவதில் பலருக்கும் தொடா்பு உள்ள நிலையில் கீழ்மட்டத்தில் உள்ளவா்கள் மீது மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்தக் குற்றச் சம்பவங்களில் தொடா்புடையவா்கள் வெவ்வேறு மாநிலங்களிள் உள்ளனா். எனவே இதுகுறித்த விசாரணை தமிழகத்தையும் தாண்டியதாக இருக்க வேண்டும். ஆகவே தமிழகத்தில் உள்ள யானைகள் இறப்பு தொடா்பான அனைத்து வழக்குகளையும் சிபிஐ விசாரிக்க வேண்டும் என உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தனா்.