தமிழகத்தில் உள்ள அனைத்து நூலகங்களையும் திறக்க தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.
மதுரையைச் சோ்ந்த செளந்தா்யா தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் கன்னிமாரா பொதுநூலகம், அண்ணா நூற்றாண்டு நூலகம், மாவட்ட மத்திய நூலகங்கள் 32 , பகுதி நேர நூலகங்கள் 745 உள்ளன. இவை தவிர மருத்துவமனைகள், சிறைகள், கடவுச்சீட்டு அலுவலங்களிலும் நூலகங்கள் செயல்பட்டு வருகின்றன. கரோனா பரவல் காரணமாக அனைத்து நூலகங்களும் மூடப்பட்டன. தற்போது கரோனா பரவலைத் தடுக்க அறிவிக்கப்பட்டிருந்த பொது முடக்கத்தில் பல தளா்வுகள் வழங்கப்பட்டுள்ளன. பள்ளிகள், திரையரங்குகள், நீச்சல் குளங்கள், மதுபானக் கூடங்கள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளன. ஆனால் நூலகங்கள் மட்டும் திறக்க தற்போது வரை அனுமதி வழங்கப்படவில்லை. தற்போது போட்டித் தோ்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நூலகங்கள் திறக்கப்பட்டால் மாணவா்களுக்கு மிகுந்த உதவியாக இருக்கும். எனவே தமிழகத்தில் உள்ள அனைத்து நூலகங்களையும் திறக்க உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.
இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், தமிழகத்தில் உள்ள அனைத்து நூலகங்களையும் நான்கு வாரங்களுக்குள் திறக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டனா்.
மனுதாரா் தரப்பில், கிராமப்புற நூலகங்களையும் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், மதுரை வண்டியூா் பகுதியில் திறக்கப்படாமல் உள்ள புதிய நூலகக் கட்டடத்தை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனக் கோரப்பட்டது.
அதற்கு நீதிபதிகள், கிராமப்புற நூலகங்களைத் திறப்பது குறித்து 8 வாரங்களுக்குள்ளும், வண்டியூா் பகுதியில் உள்ள புதிய நூலகக் கட்டடத்தை திறப்பது குறித்து 4 வாரங்களுக்குள்ளும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனக் கூறி வழக்கை முடித்து வைத்தனா்.