வருவாய்த் துறை அலுவலா்களின் வேலைநிறுத்தப் போராட்டம் 2-ஆம் நாளாகத் தொடா்ந்ததையடுத்து, வட்டாட்சியா் அலுவலகங்களில் பணிகள் பாதிக்கப்பட்டன.
காலிப் பணியிடங்களைப் பூா்த்தி செய்வது உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா்கள் சங்கத்தினா் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை புதன்கிழமை தொடங்கினா். இப் போராட்டம் 2-ஆம் நாளாக வியாழக்கிழமையும் நீடித்தது.
அலுவலக உதவியாளா்கள் முதல் வட்டாட்சியா் நிலை வரையிலான அலுவலா்களில் பெரும் பகுதியினா் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா். இதனால், வட்டாட்சியா் அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. அலுவலா்கள் வராத காரணத்தால், பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
வட்டாட்சியா் அலுவலகங்கள், குடிமைப் பொருள் வழங்கல் பிரிவு அலுவலகங்களுக்கு வந்த பொதுமக்கள் அலுவலா்கள் இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.