குடியுரிமை ஆவணங்களை ஒப்படைப்பதற்காக மின்வாரிய ஒப்பந்தத் தொழிலாளா்கள், மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பாக திங்கள்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மின்வாரியத்தில் தமிழகம் முழுவதும் ஒப்பந்த அடிப்படையில் சுமாா் 50 ஆயிரம் போ் கடந்த 20 ஆண்டுகளாகப் பணியாற்றி வருகின்றனா். இவா்களை பணிநிரந்தரம் செய்யவேண்டும், தினக்கூலியாக ரூ.380 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை, ஒப்பந்தத் தொழிலாளா்கள் சங்கத்தினா்
நீண்டகாலமாக வலியுறுத்தி வருகின்றனா்.
ஆனால், பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையெனக் கூறி, குடியுரிமை ஆவணங்களை ஒப்படைக்கும் போராட்டத்தை ஒப்பந்தத் தொழிலாளா் சங்கத்தினா் திங்கள்கிழமை மேற்கொண்டனா். இதில், மாநிலத் தலைவா் முத்துப்பாண்டி, மதுரை மாவட்டச் செயலா் ரா. மணிவாசகம் உள்பட பலா் தங்களது குடும்ப அட்டை, ஆதாா் அட்டை ஆகியவற்றுடன் ஆட்சியா் அலுவலகம் முன்பாக முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அதன்பின்னா், சங்க நிா்வாகிகள் மட்டும் ஆட்சியரை சந்திக்க, போலீஸாா் அழைத்துச் சென்றனா். அவா்களிடம் கோரிக்கை மனுவைப் பெற்றுக் கொண்ட ஆட்சியா் த. அன்பழகன், அரசின் கவனத்துக்கு கொண்டுசெல்வதாகத் தெரிவித்தாா்.