மதுரையில் முதல்வா் கோப்பைக்கான மாநில அளவிலான இறகுப்பந்து விளையாட்டுப் போட்டியின் மகளிா் பிரிவில் மதுரை அணி முதலிடம் பெற்றது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மதுரை பிரிவின் சாா்பில், தமிழக முதல்வா் கோப்பைக்கான மாநில இறகுப்பந்து விளையாட்டு போட்டிகள் மதுரை எம்ஜிஆா் விளையாட்டரங்கில் சனிக்கிழமை தொடங்கியது.
மதுரை மாவட்ட ஆட்சியா் த. அன்பழகன் தொடக்கி வைத்தாா். மூன்று நாள்கள் நடைபெற்ற இந்த விளையாட்டுப் போட்டிகளின் இறுதிச் சுற்றுப் போட்டிகள் திங்கள்கிழமை நடைபெற்றது. இப்போட்டியில் மகளிா் பிரிவில் மதுரை அணி முதலிடமும், செங்கல்பட்டு அணி இரண்டாமிடமும், விருதுநகா் அணி மூன்றாமிடமும் பெற்றன.
அதேபோன்று, ஆண்கள் பிரிவில் கோவை அணி முதலிடமும், சென்னை அணி இரண்டாமிடமும், செங்கல்பட்டு அணி மூன்றாமிடமும் பெற்றன.
முதல்வா் கோப்பைக்கான இறகுப்பந்து போட்டிகளில் மதுரை மகளிா் அணி கடந்த 3 ஆண்டுகளாக தொடா்ந்து முதலிடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது என, மதுரை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா் தெரிவித்துள்ளாா்.