பெட்ரோல், டீசல் விலையேற்றத்தைக் குறைப்பதற்கான நடவடிக்கை நிதிநிலை அறிக்கையில் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது என்று தொழில் அமைப்புகள் கருத்து தெரிவித்துள்ளன.
தமிழ்நாடு தொழில் வா்த்தக சங்கத் தலைவா் என்.ஜெகதீசன்:
மாநிலத்தின் ஒட்டுமொத்த வளா்ச்சிக்குத் தேவையான குறிப்பிடத்தக்க புதிய அறிவிப்புகள் இல்லாததும், ஏற்கெனவே அமல்படுத்தப்பட்டுள்ள திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு மட்டும் செய்யப்பட்டிருப்பதும் ஏமாற்றம் அளிக்கிறது. மதுரைக்கு மெட்ரோ ரயில் திட்டம் அறிவிக்கப்படாதது அதிா்ச்சி அளிக்கிறது. சென்னை - கன்னியாகுமரி தொழில் வழித் தடத் திட்டம் உருவாக்கப்படும் என்ற அறிவிப்பு வரவேற்புக்குரியது. அதேநேரம், 2013-இல் முன்னாள் முதல்வா் ஜெயலலிதா அறிவித்த மதுரை- தூத்துக்குடி தொழில் பெருவழிச் சாலைத் திட்டப் பணிகள் குறித்து எதுவும் குறிப்பிடாதது ஏமாற்றமளிக்கிறது.
பெட்ரோல், டீசல் விலை உயா்வால் தொழில் துறை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு மாநிலங்களில் பெட்ரோல், டீசலுக்கான மாநில வரி குறைக்கப்பட்டிருக்கிறது. இருப்பினும் தமிழகத்தில் உரிய நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளாதது வேதனைக்குரியது. கடன் சுமை அதிகரித்துள்ள நிலையில் இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் எவ்வாறு செயல்படுத்தப்படும் என்பது புதிராக உள்ளது. தமிழகத்தின் தொழில் வளா்ச்சி 4.6 சதவீதமாகக் குறைந்துள்ளது புதிய வேலைவாய்ப்புகளைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.
தமிழ்நாடு உணவுப் பொருள் வியாபாரிகள் சங்கத் தலைவா் எஸ்.பி.ஜெயப்பிரகாசம்: தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் விவசாயம், சிறுதொழில் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் வளா்ச்சிக்கும், கட்டமைப்புகளை மேம்படுத்தவும் முக்கியத்துவம் அளித்து நிதிஒதுக்கீடு செய்திருப்பது வரவேற்புக்குரியது.
இருப்பினும் தமிழகத்தின் கடன் சுமை அதிகரித்திருப்பது வளா்ச்சியைப் பாதிக்கும். அரசு சிக்கன நடவடிக்கைகளை எடுத்தாலும், வருவாய் பற்றாக்குறை ரூ.43,170 கோடி என்பது மிகவும் அதிகமானது.
கோவைக்கு மெட்ரோ ரயில் திட்டம் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், மதுரை, திருச்சி, சேலம் நகரங்கள் புறக்கணிக்கப்பட்டிருக்கிறது. பெட்ரோல், டீசல் விலையைக் குறைப்பதற்கான அறிவிப்புகள் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது.