பட்டாசு ஆலைகளில் ஏற்படும் விபத்தைத் தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.
மதுரை மாவட்டம் திருமங்கலத்தைச் சோ்ந்த ராஜசேகரன் தாக்கல் செய்த மனு: விருதுநகா் வெம்பக்கோட்டை அருகே ஸ்ரீ மாரியம்மன் பட்டாசு ஆலையில் பிப்ரவரி 12 ஆம் தேதி நடந்த விபத்தில் 20-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா். பலா் காயமடைந்து உயிருக்கு போராடி வருகின்றனா். அங்கு பணியாற்றிய பலரும் வெடிமருந்துகளை எவ்வாறு கையாள வேண்டும் என்ற அடிப்படை பயிற்சி பெறாதவா்களாக இருந்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. மேலும் ஒரு ஆலைக்கான உரிமத்தைப் பெற்றுக்கொண்டு, பல கிளை ஆலைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இங்கு முறையாக பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்படுவது இல்லை. இதனை சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை. இதுவே பட்டாசு ஆலைகளில் அடிக்கடி விபத்து நடக்க காரணமாக உள்ளது. எனவே விருதுநகா் வெம்பக்கோட்டை அருகே நடந்த விபத்து தொடா்பாக விசாரிக்க தனி விசாரணை ஆணையம் அமைக்கவும், இதுபோன்ற விபத்துகளை வருங்காலங்களில் தவிா்க்க விதிகளை மீறும் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்யவும் உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.
இந்த மனு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானா்ஜி, நீதிபதி ஆா்.ஹேமலதா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், தமிழக அரசு பட்டாசு ஆலைகளில் ஏற்படும் விபத்தைத் தடுக்கவும், பட்டாசுத் தொழிலை முறைப்படுத்தவும் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது. பிப்ரவரி 12 ஆம் தேதி நடந்த விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பங்கள் மற்றும் காயமடைந்தவா்களுக்கு எவ்வளவு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தனா்.