வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு அதிமுக கூட்டணியின் தேர்தல் நாடகம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இருந்து மதுரை வந்த அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியது: தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. தேர்தல் ஆணையம் சுதந்திரமாக இயங்கவில்லை. பாஜகவின் தலையீடு உள்ளது என்பது அவர்கள் அறிவிப்பில் இருந்து அறியமுடிகிறது.
மேற்குவங்கத்தில் தமிழகத்தை விட 60 சட்டப்பேரவை தொகுதிகள் தான் அதிகம். ஆனால் மேற்கு வங்கத்தில் 8 கட்டமாக தேர்தல் நடத்த உள்ளனர். வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு தேர்தலுக்கு செய்யப்பட்ட ஒன்றாக தெரிகிறது. தேர்தல் நாடகமாகத் தான் இதை பார்க்க முடிகிறது.
இந்த சட்ட மசோதாவை சட்டப்பேரவையில் நிறைவேற்றினாலும், ஆளுநர் ஒப்புதல் அளித்த பிறகு தான் சட்டமாகும். இனி ஆளுநர் கையெழுத்திடுவாரா என்பது தெரியவில்லை. இதேபோல கடன் தள்ளுபடி அறிவிப்பு தேர்தல் நாடகமாகவே உள்ளது.
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால் தான் ஒவ்வொரு சமூகமும் எத்தனை சதவீதம் இருக்கிறார்கள் என்பதை ஆதார பூர்வமாக நம்மால் அறிய முடியும். ஒவ்வொரு தேர்தலிலும் மூன்றாவது அணி உருவாகும். ஆனால் எப்போதுமே இருதுருவ தேர்தல் தான் நடக்கும் என்றார்.