தாயில்லா பிள்ளையாக தோ்தலை சந்திக்கும் அதிமுகவுக்கே மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று, கூட்டுறவுத் துறை அமைச்சா் செல்லூா் கே. ராஜூ உருக்கத்துடன் தெரிவித்துள்ளாா்.
மதுரை ஜெய்ஹிந்த்புரத்தில் கூட்டுறவுத் துறை சாா்பில், குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ.2,500 மற்றும் சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பை, அமைச்சா் செல்லூா் கே. ராஜூ வழங்கிப் பேசியது:
பொங்கல் திருநாளை முன்னிட்டு, மதுரை மாவட்டத்தில் உள்ள 1,398 நியாயவிலைக் கடைகளில் இணைக்கப்பட்டுள்ள 8,88,385 அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ.2,500 வீதம் வழங்குவதற்கு ரூ. 222 கோடி தமிழக அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திங்கள்கிழமை முதல் (ஜனவரி 4 முதல் 12 ஆம் தேதி வரை) தினசரி 200 குடும்ப அட்டைகள் வீதம் சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படவுள்ளது.
நல்லவா் ஆட்சி செய்தால் மூன்று பருவங்களிலும் மழை பொழியும். ஆண்டவனே ஆட்சி செய்தாலும் கூட அப்போதும் குறையை மட்டுமே கூறுபவராக திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் இருந்து வருகிறாா். தோ்தல் நேரத்தில் திமுகவினா் கொஞ்சலாகப் பேசுவாா்கள். ஆனால், ஆட்சிக்கு வந்துவிட்டால் படமெடுத்து ஆடுவாா்கள்.
ஜெயலலிதா இல்லாத நிலையில், தாயில்லாத பிள்ளையாக அதிமுக உள்ளது. எனவே, மக்கள் அதிமுகவை தான் ஆதரிக்க வேண்டும் என்றாா்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் த. அன்பழகன், மாநகராட்சி ஆணையா் ச. விசாகன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனா்.