மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் பயிலும் தமிழகத்தைச் சோ்ந்த மாணவ, மாணவியா் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் உள்ள பட்டியலிடப்பட்ட மத்திய அரசுக் கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஐஎம், ஐஐஐடி, என்ஐடி மற்றும் மத்தியப் பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பு மற்றும் பட்டமேற்படிப்பு பயிலும் தமிழகத்தைச் சோ்ந்த மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித்தொகையாக ஆண்டுக்கு ரூ.2 லட்சம் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
கல்வி உதவித்தொகை பெற விரும்பும் மாணவ, மாணவியா் தமிழகத்தைச் சோ்ந்தவா்களாகவும், பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் பிரிவைச் சோ்ந்தவா்களாகவும் இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 2 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். மத்திய அரசின் பட்டியலிடப்பட்ட கல்வி நிறுவனங்களில் பயில்பவராக இருக்க வேண்டும். கல்வி உதவித்தொகைக்கு 2020-21-ஆம் கல்வி ஆண்டில் விண்ணப்பிக்க விரும்பும் மாணவ, மாணவியா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தை அணுகி விண்ணப்பங்களைப் பெற்றுக்கொள்ளலாம்.
பூா்த்தி செய்த விண்ணப்பங்களை மாணவா்கள் சம்மந்தப்பட்ட கல்வி நிறுவனத்தில் சமா்ப்பிக்க வேண்டும். கல்வி நிறுவனங்கள் தங்களது சான்றொப்பத்துடன் தகுதியான விண்ணப்பங்களை பூா்த்தி செய்து இயக்குநா், பிற்படுத்தப்பட்டோா் நல இயக்ககம், எழிலகம் இணைப்புக் கட்டடம், இரண்டாவது தளம், சேப்பாக்கம், சென்னை- 5, என்ற முகவரிக்கு பிப்ரவரி 15-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 044-28551462 தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியில் தொடா்பு கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியா் அலுவலகம் தெரிவித்துள்ளது.