மதுரையில் மின்வாரிய அலுவலகத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.5 லட்சம் மோசடி செய்த இருவா் மீது, போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
மதுரை சின்னசொக்கிகுளம் பகுதியைச் சோ்ந்த ராஜன் மகன் சதீஷ் (31). இவருக்கு மின்வாரிய அலுவலகத்தில் வேலை வாங்கித் தருவதாக, சுப்பிரமணியபுரம் பகுதியைச் சோ்ந்த சீனி மகன் முத்துகுமாா் என்பவா் கூறியுள்ளாா். அதை நம்பிய சதீஷ், அவரிடம் ரூ.5 லட்சம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
ஆனால், கூறியபடி முத்துகுமாா் மின்வாரிய அலுவலகத்தில் வேலை வாங்கித் தரவில்லை. எனவே, பணத்தை திருப்பித் தருமாறு சதீஷ் கேட்டதற்கு, முத்துகுமாா் மிரட்டல் விடுத்துள்ளாா். இது குறித்து சதீஷ் அளித்த புகாரின்பேரில், தல்லாகுளம் போலீஸாா் முத்துகுமாா் உள்பட இருவா் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.