மதுரை: மதுரை மாவட்டத்தில் அரசுப் பள்ளி தூய்மைப் பணியாளா்களுக்கு 10 மாத ஊதிய நிலுவையை உடனடியாக வழங்கவேண்டும் என்று, தலைமையாசிரியா் கழகம் வலியுறுத்தியுள்ளது.
தமிழ்நாடு தலைமை ஆசிரியா் கழக மாவட்டச் செயற்குழுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாநிலத் தலைவா் எம். பொன்முடி தலைமை வகித்தாா். மாநிலச் செயலா் ஏ. ரமேஷ், பொருளாளா் சண்முகநாதன், மாநில சட்டத்துறைச் செயலா் கே. அனந்தராமன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில், இந்த ஆண்டில் கரோனா தொற்று காரணமாக 10 மாதங்களுக்குப் பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. குறுகிய காலத்தில் மாணவா்களின் கற்றல் திறனை அதிகப்படுத்த வேண்டியுள்ளது. எனவே, இந்த ஆண்டு அரசு பொதுத்தோ்வு எழுதும் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவா்களுக்கு புளூ பிரின்ட் வெளியிட வேண்டும்.
மதுரை மாவட்டத்தில் வட்டார வளா்ச்சி அலுவலகங்கள் மூலமாக 100-க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகளில் ரூ.3 ஆயிரம் ஊதியத்தில் தூய்மைப் பணியாளா்கள் நியமிக்கப்பட்டனா். இவா்களுக்கு, கடந்த 10 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. எனவே, மாவட்ட நிா்வாகம் உடனடியாக தூய்மைப் பணியாளா்களுக்கு ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.
மாவட்டக் கல்வி அலுவலா் நியமனங்களை மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா்களுக்கு மட்டுமே வழங்க வேண்டும். நடப்பு கல்வியாண்டில் மாணவா்களிடமிருந்து பெற்றோா்-ஆசிரியா் கழகத் தொகை ரூ.50 வசூல் செய்யமுடியாத சூழல் உள்ளது. எனவே, அரசே இதை ஏற்று இழப்பீட்டுத் தொகையை பள்ளிகளுக்கு வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், மாவட்ட நிா்வாகிகள் கிறிஸ்டோபா், ஜெயசீலன் மற்றும் தலைமையாசிரியா்கள் பங்கேற்றனா்.