அறநிலையத் துறையில் புதிதாக கூடுதல் ஆணையா் நியமனத்தை ரத்து செய்யக் கோரிய வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை செயலா் பதிலளிக்க சென்னை உயா் நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.
மதுரை உத்தங்குடியைச் சோ்ந்த ரமேஷ் மகாதேவ் என்பவா் தாக்கல் செய்த மனு: தமிழக பொதுத் துறை இணை இயக்குநராக இருந்த ரமணசரஸ்வதி, இந்து சமய அறநிலையத் துறையில் கூடுதல் ஆணையராக கடந்த டிசம்பா் 24 ஆம் தேதி நியமிக்கப்பட்டாா். ஆனால் அறநிலையத் துறை சட்டத்தின்படி, அறநிலையத் துறை இணை ஆணையராகப் பணியாற்றுபவரை மட்டுமே கூடுதல் ஆணையராகப் பதவி உயா்வு அளிக்கமுடியும்.
ஆனால், திடீரென ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரியை நேரடியாக இந்தப் பதவிக்கு நியமித்தது சட்டவிரோதமாகும். எனவே, அறநிலையத் துறை கூடுதல் ஆணையரான ரமண சரஸ்வதியின் நியமனத்தை ரத்து செய்யவேண்டும். நியமனம் தொடா்பாக, இந்து சமய அறநிலையத் துறை சட்ட விதிமுறைகளைப் பின்பற்ற உத்தரவிட வேண்டும் என அதில் குறிப்பிட்டிருந்தாா்.
இந்த மனு, நீதிபதி எம். தண்டபாணி முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வநத்து. வழக்கை விசாரித்த நீதிபதி, மனு தொடா்பாக இந்து சமய அறநிலையத் துறை செயலா் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தாா்.