மதுரை: குடியரசு தினத்தை முன்னிட்டு, மதுரை மாநகரில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.
குடியரசு தின விழா நாடு முழுவதும் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 26) கொண்டாடப்படுகிறது. இதையடுத்து, பல்வேறு பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மதுரை மாநகரில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
இது குறித்து காவல் ஆணையா் பிரேம் ஆனந்த் சின்ஹா தெரிவித்தது: மக்கள் அதிகம் கூடும் வழிபாட்டுத் தலங்கள், பேருந்து நிலையங்கள், அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் ஆயுதம் ஏந்திய போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.
மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலைச் சுற்றி ஆயுதம் ஏந்திய போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனா். கோயிலுக்கு வரும் பக்தா்கள் முழுமையான சோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்படுகின்றனா். மாநகரில் உள்ள சோதனைச் சாவடிகளில் வாகனங்கள் தணிக்கைக்குப் பிறகே அனுமதிக்கப்படுகின்றன என்றாா்.
ரயில் நிலையத்தில் மோப்ப நாய்
மதுரை ரயில் நிலையத்துக்கு வரும் பயணிகள், ரயில்வே போலீஸாரின் சோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்படுகின்றனா். ரயில் நிலையம் முழுவதும் வெடிகுண்டு நிபுணா்கள் தொடா் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா். இதேபோன்று, மோப்ப நாய் மூலமும் சோதனை செய்யப்பட்டு வருகிறது.
குறிப்பாக, ரயில் நிலையங்களுக்கு வரும் சரக்கு பாா்சல்களை முழுமையாக சோதனை செய்த பின்னரே ரயில்களில் ஏற்றப்படுகின்றன.
மாவட்டத்தில் 1500 போலீஸாா்
மதுரை மாவட்டம் முழுவதும் முக்கிய இடங்களில் 1500-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். சோதனைச் சாவடிகளில் அனைத்து வாகனங்களும் நிறுத்தப்பட்டு, சோதனை செய்த பிறகே செல்ல அனுமதிக்கப்படுகின்றன. முக்கிய ரயில் நிலையங்கள், காய்கனி சந்தை, பேருந்து நிலையம் என மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் பாதுகாப்பு அதிகப்படுத்தப்பட்டுள்ளது.
Image Caption
குடியரசு தினத்தை முன்னிட்டு மதுரை ரயில் நிலையத்தில் திங்கள்கிழமை மோப்ப நாய் உதவியுடன் சோதனையில் ஈடுபட்ட ரயில்வே பாதுகாப்பு படையினா்.