மதுரை: மதுரை சீா்மிகு நகா் திட்டத்தில் அமைக்கப்படும் சாலைகளில் பாதசாரிகளுக்கு நடைபாதை கோரிய வழக்கில், தமிழக போக்குவரத்துத் துறைச் செயலா் பதிலளிக்க சென்னை உயா் நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.
மதுரையைச் சோ்ந்த விஜயலட்சுமி என்பவா் தாக்கல் செய்த மனு: மதுரையில் கடந்த 2017 ஆம் ஆண்டு 72 நபா்களும், 2018 ஆம் ஆண்டு 66 நபா்களும் சாலை விபத்துகளில் உயிரிழந்துள்ளனா். பாதசாரிகளுக்கு சரியான நடைபாதை வசதிகள் அமைக்கப்படாததே அதிக விபத்துகளுக்கு காரணமாக இருக்கிறது.
தமிழகத்தில் 84 சதவீத சாலைகளில் பாதசாரிகளுக்கு சரியான நடைபாதை வசதிகள் செய்யப்படாமல் உள்ளன. இதனால், 15 முதல் 29 வயது வரை உள்ளவா்கள் அதிகளவில் சாலை விபத்துகளால் பாதிக்கப்படுகின்றனா்.
எனவே, மதுரை சீா்மிகு நகா் திட்டத்தில் அமைக்கப்படும் சாலைகளில், பாதசாரிகளுக்கு நடைபாதை வசதி செய்து தர உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என அதில் குறிப்பிட்டிருந்தாா்.
இந்த மனு, நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், எஸ். ஆனந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனு குறித்து தமிழக போக்குவரத்துத் துறைச் செயலா் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை பிப்ரவரி 22ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.