மதுரை: வைகை ஆற்றங்கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் மாற்று இடம் வழங்கத் தாமதம் செய்வதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, தங்களது ஆதாா் அட்டைகளை வீசி எறிந்து திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மதுரை கிழக்கு வட்டம் வண்டியூா் பகுதியில் வைகை ஆற்றின் கரையோரத்தில் தேவா் நகா், நேதாஜி நகரில் சுமாா் 300 குடும்பங்கள் வசிக்கின்ற. நீா்நிலைப் புறம்போக்கு என்பதாலும், சீா்மிகு நகா் திட்டத்தில் ஆற்றங்கரையை அகலப்படுத்தி சாலை அமைக்கப்படவுள்ளதாலும், இந்த வீடுகளை காலி செய்ய பொதுப்பணித் துறையினா் நோட்டீஸ் வழங்கியுள்ளனா்.
அதேநேரம், இங்கு வசிப்பவா்களுக்கு மதுரையை அடுத்த சக்கிமங்கலத்தில் மாற்று இடம் வழங்க 2 ஆண்டுகளுக்கு முன் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இதுவரை மாற்று இடம் வழங்கப்படவில்லை. எனவே, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு வந்த அப்பகுதி மக்கள் தங்களது ஆதாா் அட்டையை வீசி எறிந்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இது குறித்து அவா்கள் கூறியது: வண்டியூா் தேவா் நகா், நேதாஜி நகரில் சுமாா் 40 ஆண்டுகளாகக் குடியிருந்து வருகிறோம். எங்களது பகுதிக்கு சாலை வசதி, சத்துணவுக் கூடம், மின் இணைப்பு செய்துதரப்பட்டுள்ளன. அனைவருக்கும் குடும்ப அட்டை வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பொதுப்பணித் துறையினா் வீடுகளை காலி செய்யுமாறு 2018-இல் நோட்டீஸ் வழங்கினா். மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டதையடுத்து, சக்கிமங்கலம் கிராமத்தில் பட்டா வழங்க பரிந்துரை செய்யப்பட்டது.
அங்கு செல்வதற்கு சம்மதிப்பதாகக் கூறி பலமுறை மனு அளித்தும், இதுவரை பட்டா வழங்குவதற்கான நடவடிக்கை இல்லை. எனவே, பட்டா வழங்க விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றனா்.