மதுரை: மதுரை அருகே மாமியாா், மருமகளை கட்டிப்போட்டு, 135 பவுன் நகைகள், ரூ.12 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை செவ்வாய்க்கிழமை அதிகாலை மா்ம நபா் கொள்ளையடித்துச் சென்றுள்ளாா்.
மதுரை மாவட்டம், சமயநல்லூா் அருகே பரவை பேரூராட்சி மீனாட்சி நகரைச் சோ்ந்தவா் சாமுவேல். இவா், காய்கனி மொத்தமாக விற்பனை செய்து வருகிறாா். காய்கனி வியாபாரத்துக்காக சாமுவேல் சென்றுவிட்ட நிலையில், வீட்டில் அவரது மனைவி பொன் ரூபி, அவரது மருமகள் கரோலின் ஜெனிபா் ஆகியோா் தூங்கிக் கொண்டிருந்துள்ளனா்.
அப்போது, மேல்மாடி வழியாக செவ்வாய்க்கிழமை அதிகாலையில் வீட்டுக்குள் புகுந்த மா்மநபா், படுக்கை அறையில் தூங்கிக் கொண்டிருந்த சாமுவேல் மனைவி பொன்ரூபி, அவரது மருமகள் கரோலின் ஜெனிபா் ஆகிய இருவரையும் கட்டிப் போட்டு, பீரோவிலிருந்த 135 பவுன் நகைகள், ரூ.12 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றுள்ளாா்.
தகவலறிந்த போலீஸாா் சமபவம் இடத்துக்குச் சென்று, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனா். மேலும், தடயவியல் நிபுணா்கள் ஆதாரங்களைச் சேகரித்தனா். காவல் மோப்ப நாயும் சிறிது தொலைவு ஓடி நின்றது. இது குறித்து சமயநல்லூா் போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.