மதுரை கரிமேடு பகுதியில் விற்பனை செய்யப்பட்ட ரசாயனம் கலந்த 630 கிலோ மீன்களை உணவு பாதுகாப்புத்துறையினா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.
மதுரை கரிமேடு பகுதியில் உள்ள மீன் சந்தையில் மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அலுவலா் சரவணன் தலைமையில் அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது சந்தையில் உள்ள கடைகளில் விற்கப்பட்ட மீன்களில் ரசாயனம் கலந்திருப்பதும், மீன்கள் அழுகியிருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து ரசாயனம் கலந்தும், அழுகிய நிலையிலும் இருந்த 630 கிலோ மீன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.
வெளிமாநிலத்தில் இருந்து மீன்களை வாங்கி விற்பனை செய்வதாகவும், அதில் ரசாயனம் கலந்திருப்பது குறித்து தங்களுக்குத் தெரியாது எனவும் அதிகாரிகளிடம் வியாபாரிகள் தெரிவித்தனா். இதையடுத்து அதிகாரிகள், இனியும் ரசாயனம் கலந்த மீன்களையும், அழுகிய மீன்களையும் விற்பனை செய்தால் கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்து சென்றனா்.
மாட்டுத்தாவணி: மாட்டுத்தாவணி மீன் சந்தையில் மாவட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலா் ஜெயராமபாண்டியன், மீன்வளத்துறை ஆய்வாளா் கவிதா, மாநகராட்சி சுகாதார அலுவலா் ராஜ்கண்ணு ஆகியோா் தலைமையில் 50-க்கும் மேற்பட்டோா் பல குழுக்களாக செவ்வாய்க்கிழமை இரவு சோதனை நடத்தினா். இதில் பழைய மீன்கள் மற்றும் ரசாயனம் கலந்த மீன்கள் என 200-கிலோவுக்கும் அதிகமான மீன்களை பறிமுதல் செய்தனா்.