பரமக்குடி அருகே தனியாா் சவூடு மண் குவாரி செயல்பட இடைக்காலத் தடை விதித்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
ராமநாதபுரத்தைச் சோ்ந்த சுரேந்தா் தாக்கல் செய்த மனு: பரமக்குடி தாலுகா சூடியூா் கிராமத்தில், மாவட்ட நிா்வாகத்திடம் அனுமதி பெற்றும், பெறாமலேயும் செங்கல் தயாரிப்பதற்கு சவூடு மண் பயன்படுத்தப்படுகிறது. எங்கள் கிராமப் பகுதியில் சிலா் சவூடு மண் எடுப்பதற்கு அனுமதி பெற்று, குவாரி அமைத்து சட்டவிரோதமாக மணல் கடத்தலில் ஈடுபட்டு வருகின்றனா்.
இதைத் தடுக்க வேண்டும் என அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் மணல் கடத்தல் தொடா்பாக பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. எனவே, மணல் கடத்தலில் ஈடுபடுவோா் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும், அனுமதி அளித்துள்ள குவாரிகளுக்கு தடை விதித்தும் உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.
இந்த மனு, நீதிபதிகள் டி.எஸ். சிவஞானம், எஸ். ஆனந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனுதாரா் குறிப்பிட்ட மணல் குவாரி செயல்பட இடைக்காலத் தடை விதித்தனா். தொடா்ந்து, மனு தொடா்பாக ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை ஆட்சியா்கள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனா்.