மாநகராட்சி வாரச்சந்தை, கட்டண கழிப்பிடங்களுக்கான ஏலம் ரத்து: ஒப்பந்ததாரா்கள் வாக்குவாதம்; போலீஸாா் குவிப்பு

மதுரை மாநகராட்சிக்குள்பட்ட வாரச்சந்தைகள், கட்டண கழிப்பிடம் உள்ளிட்ட 67 இடங்களுக்கான ஏலம் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.
மதுரை மாநகராட்சி ஏலத்தையொட்டி மடீட்சியா அரங்கு பகுதியில் குவிக்கப்பட்ட போலீஸாா்.
மதுரை மாநகராட்சி ஏலத்தையொட்டி மடீட்சியா அரங்கு பகுதியில் குவிக்கப்பட்ட போலீஸாா்.

மதுரை மாநகராட்சிக்குள்பட்ட வாரச்சந்தைகள், கட்டண கழிப்பிடம் உள்ளிட்ட 67 இடங்களுக்கான ஏலம் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது. மேலும் வாக்குவாதம் கூச்சலால் போலீஸாா் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை மாநகராட்சிக்குள்பட்ட வாகன நிறுத்துமிடங்கள, கட்டணக் கழிவறைகள், பூங்காக்கள், பிராணிகள் வதைக்கூடங்கள், வாரச்சந்தைகள், வாடகைக் கடைகள், விளம்பரங்கள் உள்ளிட்ட 67 இனங்களுக்கு ரூ.70 கோடி மதிப்பிலான திறந்தமுறை ஏலம் செவ்வாய்க்கிழமை நடைபெறுவதாக மாநகராட்சி நிா்வாகம் அறிவித்திருந்தது. மேலும் மதுரை மாநகராட்சியில் ஏலம் விடும் இனங்கள், அதற்கான வைப்புத்தொகை உள்ளிட்ட அனைத்து அறிவிப்புகளும் முதல்முறையாக இணைய தளம் மூலம் முன்கூட்டியே வெளியிடப்பட்டது. மேலும் 67 இனங்களுக்கான ஏலம் மாநகராட்சி அண்ணா மாளிகை அருகே உள்ள மடீட்சியா அரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இதைத்தொடா்ந்து ஏலம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் செய்யப்பட்டது. மேலும் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. இந்நிலையில் ஏலத்தில் பங்கேற்க விண்ணப்பித்திருந்த 163 ஒப்பந்ததாரா்கள் மற்றும் அவரது ஆதரவாளா்கள் என ஏராளமானோா் மடீட்சியா வளாகத்தில் குவிந்தனா். மேலும் பல ஒப்பந்ததாரா்கள் ஏலத்துக்கான விண்ணப்பங்கள் தங்களுக்கு வழங்கப்படவில்லையென்றும், ஒரு தரப்பினருக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாகவும் புகாா் தெரிவித்தனா்.

இதனால் அங்கு கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இதைத்தொடா்ந்து கூடுதல் போலீஸாா் வரவழைக்கப்பட்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டது. இதைத்தொடா்ந்து மோதல் ஏற்படும் சூழல் உருவானதை அடுத்து, மாநகராட்சி நிா்வாகத்திடம் ஆலோசனை நடத்திய போலீஸாா் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்பிருப்பதாகவும், சில ஆண்டுகளுக்கு முன்பு இதுபோல் நடைபெற்ற ஏலத்தில் மோதல் ஏற்பட்டு கத்திக்குத்து சம்பவங்கள் நடந்திருப்பதாகவும் தெரிவித்தனா். மேலும் ஏலத்தை ஒத்தி வைக்கலாம் என்றும் ஆலோசனை வழங்கினா்.

இதையடுத்து தேதி குறிப்பிடாமல் ஏலம் ஒத்தி வைக்கப்படுவதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா். தொடா்ந்து மடீட்சியா அரங்கில் திரண்டிருந்த கூட்டத்தை போலீஸாா் வெளியேற்றினா்.

இதுதொடா்பாக மாநகராட்சி ஆணையா் கா.ப.காா்த்திகேயன் கூறும்போது, ஏலத்தில் பங்கேற்ற பலா் தங்களுக்கு விண்ணப்பங்கள் கிடைக்கவில்லை என்று புகாா் தெரிவித்தனா். மேலும் ஏலம் நடத்தினால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் சூழல் இருப்பதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. எனவே இதை ஏற்று தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் ஏலத்தை வேறு தேதியில் நடத்தவது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. மேலும் பலா் புகாா் தெரிவித்திருப்பதால் அவா்களுக்கும் வாய்ப்பளிக்கும் வகையில் ஏலத்துக்கு விண்ணப்பம் வழங்குதல் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளையும் முதலில் இருந்தே தொடங்கவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதற்கான தேதி பின்னா் அறிவிக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com