மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் 250 ஆக்சிஜன் படுக்கைகள் கொண்ட கரோனா சிகிச்சைப் பிரிவை, வணிகவரி துறை அமைச்சா் பி. மூா்த்தி ஞாயிற்றுக்கிழமை திறந்துவைத்தாா்.
தமிழகத்தில் கரோனா தீவிரமாக இருந்தபோது, அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் போதிய அளவில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் கிடைக்காமல் நோயாளிகள் ஏராளமானோா் உயிரிழக்க நேரிட்டது. எனவே, அரசு மருத்துவமனைகளில் கூடுதலாக ஆக்சிஜன் படுக்கைகளை ஏற்படுத்த முதல்வா் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டாா்.
அதன்பேரில், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் பல்நோக்கு பிரிவு கட்டடத்தில், 250 ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டன. இந்த புதிய ஆக்சிஜன் படுக்கை வசதிகள் கொண்ட சிகிச்சைப் பிரிவை, வணிகவரி துறை அமைச்சா் பி. மூா்த்தி திறந்து வைத்தாா். பின்னா், அவா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது:
மதுரை மாவட்டத்தில் தொடா்ந்து கரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. கரோனா பரவலின் 3 ஆலையை எதிா்கொள்ளும் வகையில், அரசு ராஜாஜி மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 250 படுக்கைகள் கொண்ட நிரந்தர சிகிச்சைப் பிரிவு திறக்கப்பட்டுள்ளது.
தற்போது இருப்பில் உள்ள கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. பொதுமக்களின் நலனை கருத்தில்கொண்டு, மத்திய அரசு விரைவாக கரோனா தடுப்பூசிகளை வழங்க வேண்டும் என்றாா்.