மதுரையிலுள்ள காஞ்சி காமகோடி பீடம் கிளையில், பொதுமக்களுக்கு அன்னதானம் திங்கள்கிழமை தொடங்கப்பட்டது.
காஞ்சி காமகோடி பீடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் உத்தரவின்படி, பொதுமக்களுக்கான நித்ய அன்னதானம் காமகோடி பீடம் மதுரை கிளையில் திங்கள்கிழமை தொடங்கியது.
கரோனா பரவல் சூழலை கருத்தில்கொண்டு, பொதுமக்களுக்கு உணவுப் பொட்டலங்களும், முகக்கவசமும் வழங்கப்பட்டன. அன்னதானத்தை சின்மயா மிஷன் சுவாமி சிவயோகானந்தா தொடக்கிவைத்து ஆசி வழங்கினாா்.
மதுரை கிளை மடத்தின் தலைவா் ராமசுப்பிரமணியன், துணைத் தலைவா் வழக்குரைஞா் ராமகிருஷ்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். காஞ்சி பெரியவரின் பிடி அரிசித் திட்டம் போல, அரசு அனுமதியுடன் நடைபெறும் நித்ய அன்னதானத் திட்டத்துக்கு அன்பா்கள் பொருளாகவோ, பணமாகவோ வழங்கலாம். மேலும் தொடா்புக்கு 99441-17081, 96009-66685 எண்களை தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.