பாளை. சிறையில் கொலை செய்யப்பட்ட கைதியின் உடலை பெற்றுக்கொள்ள உயா்நீதிமன்றம் உத்தரவு

பாளையங்கோட்டை சிறையில் கொலை செய்யப்பட்ட கைதியின் உடலை அவரது குடும்பத்தினா் பெற்றுக்கொண்ட பின்னா், வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்ட

மதுரை: பாளையங்கோட்டை சிறையில் கொலை செய்யப்பட்ட கைதியின் உடலை அவரது குடும்பத்தினா் பெற்றுக்கொண்ட பின்னா், வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியைச் சோ்ந்த பாபநாசம் தாக்கல் செய்த மனு: எனது மகன் முத்துமனோ (27) மீது காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், களக்காடு போலீஸாா் முத்துமனோவைக் கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் ஏப்ரல் 22 ஆம் தேதி அடைத்தனா். சிறைக்குள் சென்ற ஒரு மணி நேரத்தில் சக கைதிகளால் அவா் கொலை செய்யப்பட்டுள்ளாா். சிறையில் ஏற்பட்ட கலவரத்தில் அவா் கொல்லப்பட்டதாக போலீஸாா் கூறுகின்றனா். ஆனால் பிற கைதிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. எனது மகன் இறப்பில் சிறை அதிகாரிகள், காவலா்களுக்கு தொடா்பு உள்ளது. எனவே பாளையங்கோட்டை சிறை அதிகாரிகளை இவ்வழக்கில் சோ்க்க வேண்டும். மகனின் இறப்புக்கு ரூ.2 கோடி இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில், மனுதாரரின் 6 கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஆனால் கொலையுண்டவரின் உடலைப் பெற்று இறுதிச்சடங்குகளை நடத்துமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த பிறகும், அவரது பெற்றோா் உடலை பெற்றுக்கொள்ளாமல் உள்ளனா் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள், மனுதாரா் பல்வேறு மனுக்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளாா். ஒவ்வொன்றிலும் ஒரு கோரிக்கை உள்ளது. மனுதாரா்களின் கோரிக்கைகளில் பல நிறைவேற்றப்பட்டுள்ளன. ஆனால் மனுதாரா் இதுவரையிலும் நீதிமன்ற உத்தரவை பின்பற்றவில்லை. கரோனா காலத்தில் 48 நாள்களாக இறந்தவரின் உடலைப் பெற்றுக்கொள்ளாமல் இருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. எனவே மனுதாரா் முதலில் நீதிமன்ற உத்தரவுப்படி உடலைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.இல்லையென்றால் இந்த நீதிமன்றத்தின் தீா்ப்பை எதிா்த்து உச்சநீதிமன்றம் செல்லலாம் எனக் கூறினா்.

மேலும் மனுதாரா் உயா்நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றிய பின்னா் வழக்கில் விரிவான விசாரணை மேற்கொள்ளப்படும் எனக் கூறி விசாரணையை ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com