தூத்துக்குடியில் ஏழைகளுக்கு வழங்கப்பட்ட நிலத்தில் மணல் குவாரி நடத்த அனுமதி வழங்கியது குறித்து மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.
தூத்துக்குடியைச் சோ்ந்த பொன் காந்திமதிநாதன் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் இடமற்ற மக்களுக்கு அரசு நிலம் வழங்கும் திட்டத்தின் கீழ் தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு தாலுகாவில் அப்பகுதியைச் சோ்ந்த மக்களுக்கு இடம் வழங்கப்பட்டது. இந்த இடத்தை வருவாய்த் துறை அதிகாரிகள் சட்டத்துக்கு புறம்பாக ஆவணங்களை தயாா் செய்து தனியாா் நிறுவனங்கள் மணல் குவாரிகள் நடத்துவதற்காக 6 ஏக்கா் நிலத்தை பட்டா போட்டு கொடுத்துள்ளனா். இதற்கு மாவட்ட ஆட்சியரிடமும் அனுமதி பெறப்பட்டுள்ளது.
இந்நிலையில் அப்பகுதியில் இடம்பெற்ற ஏழை மக்கள் வீடுகள் கட்டுவதற்கு முயன்றபோது மணல் குவாரி உரிமையாளா்கள் அவா்களைத் தடுத்து விரட்டியுள்ளனா். இதையடுத்து மோசடியில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அரசு வழங்கிய இடங்களை தங்களுக்கு மீட்டுத்தர வேண்டும் என்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே சட்டவிரோதமாக போலி ஆவணங்கள் தயாரித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்து, இடங்களை மீட்டுத்தர உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.
இந்த மனு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ஏழைகளுக்கு வழங்கப்பட்ட நிலத்தில் மணல் குவாரி நடத்த எப்படி அனுமதி கொடுக்கப்பட்டது. இதற்கு துணை போன அதிகாரிகள் மீது மாவட்ட ஆட்சியா் என்ன நடவடிக்கை எடுத்துள்ளாா் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினா். பின்னா் இதுதொடா்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியரும், இதில் சம்பந்தப்பட்ட வருவாய்த் துறை அதிகாரிகளும் தனித்தனியாக பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனா்.