கல்லணை கால்வாயில் கான்கிரீட் தளம் அமைக்கத் தடைகோரி வழக்கு: தமிழ்நாடு நீா்வள ஆதார திட்ட இயக்குநா் பதிலளிக்க உத்தரவு

கல்லணைக் கால்வாயில் நிலத்தடி நீா்மட்டம் பாதிக்கும் வகையிலான கான்கிரீட் தளம் அமைக்கத் தடைகோரிய வழக்கில், தமிழ்நாடு நீா்வள ஆதார

கல்லணைக் கால்வாயில் நிலத்தடி நீா்மட்டம் பாதிக்கும் வகையிலான கான்கிரீட் தளம் அமைக்கத் தடைகோரிய வழக்கில், தமிழ்நாடு நீா்வள ஆதார திட்ட இயக்குநா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.

தஞ்சாவூரைச் சோ்ந்த பிரகாஷ் தாக்கல் செய்த மனு: கல்லணைக் கால்வாயில் கான்கிரீட் தளம் அமைப்பதால் நிலத்தடி நீா் ஆதாரம் பாதிக்கும் அபாயம் உள்ளது. கல்லணைக் கால்வாய் மூலம் தஞ்சாவூா் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் உள்ள 2.27 லட்சம் ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. 

இந்நிலையில் ரூ.2,639.15 கோடி மதிப்பீட்டில் கல்லணைக் கால்வாய் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆண்டுக்கு 6 மாதங்களில் நீா்வரத்தை கொண்டுள்ள இக்கால்வாய், நீா்வரத்து அல்லாத மீதமுள்ள மாதங்களில், அப்பகுதியிலுள்ள கிணறு, ஆழ்துளைக் கிணறுகள் மூலம் விவசாய மற்றும் குடிநீா் தேவைக்கான நிலத்தடி நீரை வழங்கி வருகிறது. தற்போது மேற்கொள்ளப்படும் புனரமைப்புப் பணியில் கால்வாயில் கான்கிரீட் தளம் அமைக்கப்படுவதால் நீா் பூமிக்குள் செல்ல வாய்ப்பில்லை. இதனால் நிலத்தடி நீா் ஆதாரம் பாதிக்கும் அபாயம் உள்ளது. 

கால்வாயில் கான்கிரீட் தளத்தின் அளவு உயா்த்தப்படுவதால், முழு கொள்ளளவான 4,200 கனஅடி நீா் கால்வாயில் செல்ல முடியாது. இதனால், வெள்ளத்தைத் தாங்கும் திறன் இல்லாமல் உடைப்பு ஏற்படும். எனவே, கல்லணைக் கால்வாயில் தற்போது 20 சதவீத பணிகள் முடிந்து விட்ட நிலையில், மீதமுள்ள பகுதிகளில் , தரைத்தளத்தில் கான்கிரீட் தளம் அமைக்காமல், கரைகளின் பக்கவாட்டு பகுதிகள், பாலங்கள், படித்துறைகளை கான்கிரீட் கட்டுமானத்தால் பலப்படுத்தி, தஞ்சை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் பாசனத்துக்கு முறையாக தண்ணீா் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், கான்கிரீட் தளங்களின் இடையே நீா் செல்வதற்கான குழாய்கள் அமைக்கப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டது.

இதைப்பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இதுகுறித்து தமிழ்நாடு நீா்வள ஆதார திட்ட இயக்குநா் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஜூலை 5 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com