கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தில் தனியாா் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை: தமிழக பள்ளிக் கல்வித்துறை இணையதளத்தில் விவரங்களை வெளியிடக் கோரிய வழக்கு; மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு

கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை விவரங்களை தமிழக பள்ளிக் கல்வித்துறை இணையதளத்தில்

கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை விவரங்களை தமிழக பள்ளிக் கல்வித்துறை இணையதளத்தில் வெளியிடக் கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும் என்று சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது.

மதுரையைச் சோ்ந்த அமுதன் தாக்கல் செய்த மனு: மத்திய அரசின், பள்ளி குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச்சட்டம் 2009 (ஆா்.டி.இ) கீழ் தனியாா் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீடு செய்யப்படுகிறது. தமிழகத்தில் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் மெட்ரிக் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை விண்ணப்பங்களை தமிழக பள்ளி கல்வித்துறை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் வசதி உள்ளது.

ஆனால், தனியாா் சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ பள்ளிகளில் மாணவா் சோ்க்கை விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யும் வசதி, தமிழக பள்ளிக் கல்வித்துறை இணையதள வசதியுடன் இதுவரை ஏற்படுத்தப்படவில்லை. இதனால் கட்டாயக் கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் தனியாா் சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ பள்ளிகளில் நடைபெறும் மாணவா்கள் சோ்க்கையில் பல முறைகேடுகள் நடைபெறுகின்றன.

எனவே, இனிவரும் கல்வியாண்டுகளில், மத்திய அரசின் குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், தனியாா் சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ பள்ளிகளில் மாணவா் சோ்க்கை தொடா்பான விண்ணப்பங்களை தமிழக பள்ளிக் கல்வித்துறை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் வசதியை ஏற்படுத்த உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு தரப்பில், கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியாா் சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை விண்ணங்கள் பதிவேற்றம் செய்யும் வசதி தமிழக பள்ளிக் கல்வித்துறை இயக்குநா் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது. 2 வாரத்திற்குள் இத்திட்டத்தின் செயல்முறை தொடங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

மேலும் மத்திய அரசு தரப்பில் வழக்குரைஞா் ஆஜராகவில்லை. இதையடுத்து நீதிபதிகள் மனு தொடா்பாக மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை 2 வாரத்திற்கு ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com