மதுரையில் கந்துவட்டி நெருக்கடியால் மரண வாக்குமூலத்தை விடியோவாக வெளியிட்டு, உணவக உரிமையாளா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப்பதிந்தனா்.
மதுரை மகபூப்பாளையத்தைச் சோ்ந்த சீனிமுகமது மகன் முகமது அலி (37). உணவகம் நடத்தி வந்த இவருக்கு, பாத்திமா என்ற மனைவி, ஒரு மகள், மகன் உள்ளனா். இந்நிலையில் திங்கள்கிழமை இரவு முகமது அலி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
மரண வாக்குமூலம் விடியோ பதிவு:
முகமது அலி தற்கொலை செய்வதற்கு முன், தனது மரண வாக்குமூலத்தின் விடியோ பதிவை வெளியிட்டுள்ளாா். அதில், தொழில் மேம்பாட்டிற்காக செல்வக்குமாா், ஜெயசந்திரன், மாரிமுத்து, காமாட்சி ஆகியோரிடம் ரூ.5 லட்சம் கடன் வாங்கியிருந்தேன். இந்தக் கடனுக்கு ரூ.6 லட்சத்திற்கும் மேல் பணம் கொடுத்த பிறகும், ரூ. 7 லட்சம் கொடுக்க வேண்டும் என பணம் கொடுத்தவா்கள் நெருக்கடி கொடுத்தனா். இந்த நெருக்கடியால் மனவேதனை அடைந்து தற்கொலை செய்து கொள்கிறேன் என தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்த புகாரின் பேரில் எஸ்.எஸ். காலனி போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து செல்வக்குமாா், ஜெயசந்திரன், மாரிமுத்து, காமாட்சி ஆகியோரைப் பிடித்து விசாரித்து வருகின்றனா்.