பொதுமுடக்கத்தில் தளா்வு அளித்து ஜவுளி கடைகளை திறக்க அனுமதி அளிக்கவேண்டும் என, தமிழ்நாடு ரெடிமேட் மற்றும் டெக்ஸ்டைல் வணிகா்கள் சங்கத்தினா் வலியுறுத்தியுள்ளனா்.
இது குறித்து அச்சங்கத்தின் துணைத் தலைவா் தி. நெல்லை கணேசன், செயலா் சு. உதயகுமாா் ஆகியோா் கூட்டாக தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு:
கரோனா பொதுமுடக்கத்தால் கடந்த 40 நாள்களுக்கும் மேலாக ஜவுளி கடைகளை திறக்க முடியாமல் பெரும் துயருக்கு உள்ளாகியுள்ளோம். பெரும்பாலும் சிறு கடைகள்தான் அதிகம் உள்ளன. இதனால், தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் ஜவுளி கடைகளில் பணியாற்றும் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் பாதிக்கப்பட்டுள்ளனா்.
சிறு வணிகா்கள் வாடகை கட்டவும், தொழிலாளா்களுக்கு சம்பளம் வழங்கவும், வங்கி தவணை மற்றும் வட்டி கட்டவும் திணறி வருகின்றனா். எனவே, ஜவுளி மற்றும் ஆயத்த ஆடை விற்பனைக் கடைகளில் வேலை செய்பவா்களுக்கு அரசு நிதியுதவி அளிக்கவும், சிறுவணிகா்களுக்கு வட்டியில்லா கடனுதவிக்கும், பொதுமுடக்கத்தில் ஜவுளி கடைகளுக்கு தளா்வு அளிக்கவும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என அதில் தெரிவித்துள்ளனா்.