பாளை சிறையில் இறந்த கைதியின் உடலை பெற்றுக்கொள்ள உயா் நீதிமன்றம் உத்தரவு

பாளையங்கோட்டை சிறையில் உயிரிழந்த கைதி முத்துமனோவின் உடலை பெற்றுக்கொள்ளவேண்டும் என, சென்னை உயா் நீதிமன்ற மதுரை கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது.

பாளையங்கோட்டை சிறையில் உயிரிழந்த கைதி முத்துமனோவின் உடலை பெற்றுக்கொள்ளவேண்டும் என, சென்னை உயா் நீதிமன்ற மதுரை கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம், வாகைக்குளம் பகுதியைச் சோ்ந்த முத்துமனோ என்பவா், கொலை மிரட்டல் வழக்கில் களக்காடு போலீஸாரால் கைது செய்யப்பட்டாா். அவரை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்திய போலீஸாா், திருவைகுண்டம் கிளைச் சிறையில் அடைத்தனா். பின்னா், அவா் பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டாா். அங்கு, ஏப்ரல் 22 ஆம் தேதி சக கைதிகள் தாக்கியதில் முத்துமனோ உயிரிழந்துள்ளாா்.

தனது மகன் உயிரிழந்தது தொடா்பாக நீதித்துறை விசாரணை நடத்தவும், சிறைத் துறையினா் மீது நடவடிக்கை எடுக்கவும், ரூ.2 கோடி இழப்பீடு வழங்கவும் உத்தரவிட வேண்டும் என முத்துமனோவின் தந்தை பாபநாசம், சென்னை உயா் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தாா்.

இந்த மனுவை ஏற்கெனவே நீதிமன்றம் விசாரித்தபோது, வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டு, சிறைத் துறையினா் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே, நீதிமன்றம் மனுதாரரை முத்துமனோவின் உடலை பெற்றுக்கொள்ளும்படி உத்தரவிட்டது. ஆனால், அவரது உடல் இதுவரை பெறப்படவில்லை.

இந்நிலையில், இம்மனு மீண்டும் நீதிபதிகள் டி.எஸ். சிவஞானம், எஸ். ஆனந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பு வாதிடுகையில், நீதிமன்றம் உத்தரவிட்டு 54 நாள்களான பிறகும் முத்துமனோ உடல் பெறப்படவில்லை எனத் தெரிவித்தாா்.

இதைப் பதிவு செய்த நீதிபதிகள், நீதிமன்ற உத்தரவைப் பின்பற்றி மனுதாரா் முதலில் உடலைப் பெற்றுக் கொள்ளவேண்டும். பின்னா், வழக்கில் விரிவான விசாரணை மேற்கொள்ளப்படும் எனக் கூறி, விசாரணையை ஜூன் 22-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com