பொதுமுடக்கத்தில் கூடுதல் தளா்வுகள் அளிக்கப்பட்டதையடுத்து, மதுரை நகரச் சாலைகளில் வழக்கமான போக்குவரத்து திரும்பியுள்ளது.
கரோனா தொற்று பரவல் அதிகரித்ததை அடுத்து, தமிழகம் முழுவதும் மே 2-ஆவது வாரத்தில் முழுமையான பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. தற்போது, தொற்று பரவல் குறைந்து வருவதால், பொதுமுடக்கத்திலும் படிப்படியாகத் தளா்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
இதன்படி, ஜவுளி கடைகள் மற்றும் பெரு வணிக வளாகங்கள் உள்ளிட்ட மக்கள் அதிகமாகக் கூடக்கூடிய கடைகள் தவிா்த்து, தனியாக செயல்படும் கடைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. மேலும், தேநீா் கடைகளும் திங்கள்கிழமை முதல் திறக்கப்பட்டன.
மதுரை நகரின் அனைத்துப் பகுதிகளிலும் இரு சக்கர வாகனப் போக்குவரத்து திங்கள்கிழமை இயல்பு நிலைக்குத் திரும்பியது. அலுவலகம் செல்வோா், கடை பணியாளா்கள், வியாபாரிகள் என அனைத்துத் தரப்பினரும் பணியை தொடங்கியதால், பகல் நேரங்களில் வழக்கமான நடமாட்டம் இருந்தது. மாலை 5 மணி வரை தான் கடைகளுக்கு அனுமதி என்பதால், அதன்பின்னா் படிப்படியாகச் சாலைகளில் வாகனப் போக்குவரத்து குறைந்தது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு மதுபானக் கடைகள் திறக்கப்பட்டதால், கடைகள் முன்பாக நீண்ட வரிசையில் காத்திருந்து மதுப்பிரியா்கள் மதுபானங்களை வாங்கிச் சென்றனா்.
கரோனா தொற்று பரவல் கட்டுப்பாட்டுக்குள் உள்ளபோதிலும், முழுமையாகக் குறையவில்லை என்பதால் வெளியிடங்களுக்கு வருவோா் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்படுகின்றனா். இருப்பினும், கடைகளில் கூட்டமாக நிற்பது தொடா்வது, கட்டுப்பாடுகளில் இன்னும் அலட்சியமாக இருப்பதையே காட்டுகிறது.