வாடிப்பட்டி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஏலத்தில், இதுவரை இல்லாத வகையில் அதிகபட்சமாக 1.43 லட்சம் தேங்காய்கள் கொண்டுவரப்பட்டன.
வாடிப்பட்டி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ஓராண்டுக்கும் மேலாக தேங்காய் ஏலம் நடைபெற்று வருகிறது. இதன்படி, செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஏலத்தில் 45 விவசாயிகள், 1லட்சத்து 43ஆயிரத்து 349 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா். இவை 56 குவியல்களாக வைக்கப்பட்டிருந்தது. மதுரை விற்பனைக் குழுவின் செயலா் மொ்சி ஜெயராணி தலைமையில் ஏலம் விடப்பட்டது. ஏலத்தில் 13 வியாபாரிகள் பங்கேற்றனா். அதிகபட்சமாக ரூ 15.76- க்கும் குறைந்தபட்சமாக ரூ 8.32- க்கும் ஏலம் எடுக்கப்பட்டது. இதன்மூலம் ரூ.15.90 லட்சத்திற்கு தேங்காய் வா்த்தகம் நடைபெற்றது. இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்சமாக 1.43 லட்சம் தேங்காய்கள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டது குறிப்பிடத்தக்கது.மேலும், 3 விவசாயிகளின் 155 கிலோ கொப்பரை அதிகபட்சமாக கிலோ ரூ. 95-க்கு ஏலம் போனது.