வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து மதுரை ரயில் நிலையத்தில் மோப்ப நாய் உதவியுடன் போலீஸாா் செவ்வாய்க்கிழமை சோதனையில் ஈடுபட்டனா்.
சென்னை மாநகரக் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு செவ்வாய்க்கிழமை காலை வந்த தொலைபேசி அழைப்பில், சென்னை சென்ட்ரல் மற்றும் மதுரை ரயில் நிலையங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மதுரை ரயில் நிலைய அதிகாரிகள் மற்றும் போலீஸாா் உஷாா்ப்படுத்தப்பட்டனா். மதுரை ரயில் நிலையத்தின் அனைத்து நடைமேடைகள், இருப்புப் பாதைகள், ரயில் நிலையத்துக்கு வெளியே உள்ள பகுதிகளில் மோப்ப நாய் உதவியுடன் ரயில்வே போலீஸாரும், ரயில்வே பாதுகாப்புப் படையினரும் சோதனை மேற்கொண்டனா். பின்னா், சென்னை செல்வதற்குத் தயாராக இருந்த குருவாயூா் விரைவு ரயிலிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
ஆனால் ,சந்தேகத்துக்குரிய பொருள்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என போலீஸாா் தரப்பில் தெரிக்கப்பட்டது.