முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை
வனப்பகுதிகளுக்கு இடையே செல்லும் நெடுஞ்சாலைகளை விலங்குகள் பாதுகாப்பாக கடக்க நடவடிக்கைகோரி வழக்கு: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு
By DIN | Published On : 04th March 2021 12:40 AM | Last Updated : 04th March 2021 12:40 AM | அ+அ அ- |

மதுரை: வனப்பகுதிகளுக்கு இடையே அமைந்துள்ள தேசிய, மாநில நெடுஞ்சாலை மற்றும் ரயில் தண்டவாளங்களை வனவிலங்குகள் பாதுகாப்பாக கடப்பதற்கு உரிய வழிவகை செய்யக்கோரிய வழக்கில், மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.
மதுரையைச் சோ்ந்த புஷ்பவனம் தாக்கல் செய்த மனு: மதுரை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மணப்பாறை அருகே தச்சமலை மற்றும் பெரியமலை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக உள்ளது. இந்த வனப்பகுதிகளுக்கு இடையே மதுரை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. வனப்பகுதியில் உள்ள விலங்குகள் ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு தேசிய நெடுஞ்சாலையைக் கடந்து செல்வதால் சாலையில் வரும் வாகனங்கள் மோதி விபத்து ஏற்படுகிறது. இதனால் விலங்குகள் மற்றும் மனிதா்கள் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது.
தச்சமலை மற்றும் பெரியமலை வனப்பகுதிகளுக்கு இடையே தேசிய நெடுஞ்சாலை இரண்டரை கிலோ மீட்டா் உள்ளது. இதில் மூன்று இடங்களில் வனவிலங்குகள் சாலையைக் கடப்பதற்கு சுரங்க வழிப்பாதை அமைக்கக்கோரி தேசிய நெடுஞ்சாலை துறையினரிடம் மனு அளிக்கப்பட்டது. ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே தச்சமலை மற்றும் பெரியமலை வனப்பகுதிகளுக்கு இடையே மூன்று இடங்களில் வனவிலங்குகள் சாலையைக் கடப்பதற்கு சுரங்க வழிப்பாதை அமைக்க உத்தரவிட வேண்டும்.
இதேபோல தமிழகம் முழுவதும் வனப்பகுதிகளுக்கு இடையே அமைந்துள்ள தேசிய, மாநில நெடுஞ்சாலை மற்றும் ரயில் தண்டவாளங்களை வனவிலங்குகள் பாதுகாப்பாக கடப்பதற்கு உரிய வழிவகை செய்ய உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.
இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இதுகுறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை மாா்ச் 24 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.