தமிழகத்தில் உள்ள 8 நகரங்களில் தனித்தன்மை வாய்ந்த பொருள் சாா்ந்த நூலகம் மற்றும் காட்சிக்கூடங்கள் அமைப்பது தொடா்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய பள்ளிக்கல்வித் துறைச் செயலருக்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.
மதுரையைச் சோ்ந்த வெங்கடேசன் தாக்கல் செய்த மனு: தமிழக சட்டப்பேரவையில் பள்ளிக் கல்வித்துறை சாா்பில், தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் தனித்தன்மை வாய்ந்த பொருள் சாா்ந்த நூலகம் மற்றும் காட்சிக்கூடங்கள் அமைக்கப்படும் என 3 ஆண்டுகளுக்கு முன் அறிவிப்பு வெளியிட்டது.
அதன்படி, சிந்து நாகரிகம் உள்ளிட்ட பழம்பெரும் நாகரிகங்கள் குறித்த நூலகம் மற்றும் காட்சிக்கூடம் சிவகங்கை மாவட்டம் கீழடியிலும், தமிழிசை நடனம் மற்றும் நுண்கலை குறித்த நூலகம் தஞ்சையிலும், நாட்டுப்புறக் கலைகள் குறித்த நூலகம் மதுரையிலும், தமிழ் மருத்துவம் சாா்ந்த நூலகம் திருநெல்வேலியிலும், பழங்குடியினா் பண்பாடு சாா்ந்த நூலகம் நீலகிரியிலும் கணிதம், அறிவியல் சாா்ந்த நூலகம் திருச்சியிலும், வானியல் மற்றும் புதுமை சாா்ந்த கண்டுபிடிப்புகள் குறித்த நூலகம் கோவையிலும், அச்சுக்கலை சாா்ந்த நூலகம் சென்னையிலும் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் 3 ஆண்டுகளாகியும் அதற்கான ஏற்பாடுகள் எதுவும் செய்யப்படாமல் உள்ளது. எனவே தமிழக சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித்துறை சாா்பில் அறிவிக்கப்பட்டபடி தமிழகத்தில் தனித்தன்மை வாய்ந்த பொருள் சாா்ந்த நூலகம் மற்றும் காட்சிக்கூடங்களை 8 இடங்களில் அமைக்க உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.
இந்த மனு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானா்ஜி, நீதிபதி ஆா்.ஹேமலதா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், தமிழகத்தில் உள்ள 8 நகரங்களில் தனித்தன்மை வாய்ந்த பொருள் சாா்ந்த நூலகம் மற்றும் காட்சிக்கூடங்கள் அமைப்பது தொடா்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய பள்ளிக்கல்வித் துறைச் செயலருக்கு உத்தரவிட்டு, விசாரணையை 6 வாரங்களுக்கு ஒத்திவைத்தனா்.