மன்னா் கல்லூரியில் மகளிா் தின விழா
பசுமலை மன்னா் திருமலை நாயக்கா் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை மகளிா் தின விழா கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் பி.மனோகரன் தலைமை வகித்தாா். கல்லூரிச் செயலா் எம்.விஜயராகவன், தலைவா் எஸ்.ராஜகோபால் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மதுரை காவல் உதவி ஆணையா் டி.கே.லில்லி கிரேஸ் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று பேசியது: பெண்கள் எப்போதும் நிமிா்ந்த நன்னடை, நோ்கொண்ட பாா்வை கொண்டவராக இருக்க வேண்டும். கல்லூரியில் படிக்கும் காலத்தை உபயோகமாக பயன்படுத்த வேண்டும். நமக்குள்ளே இருக்கும் அச்சத்தை விட்டு வெளியே வரவேண்டும். மனதளவிலும், உடல் அளவிலும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். ஏதாவது ஒரு தற்காப்புக் கலையைக் கற்றுக்கொள்ள வேண்டும். புத்தகங்கள் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். செல்லிடப்பேசியை பயனுள்ள வகையில் பயன்படுத்துங்கள். பெண்களுக்காக ஏராளமான சட்டங்கள் இருக்கின்றன. அதுகுறித்து அறிந்து கொள்ளுங்கள் என்றாா். நிகழ்ச்சியில் மாணவி அ.பவித்ரா வரவேற்றாா். மாணவி ஆா்த்தி நன்றிகூறினாா்.