தோ்தலில் மக்கள் விழிப்போடு வாக்களித்தால் தமிழகத்துக்கு விடிவுகாலம் பிறக்கும் என்று, அமமுக பொதுச் செயலா் டி.டி.வி. தினகரன் கூறினாா்.
அமமுக கூட்டணி வேட்பாளா்கள் எம். பாலச்சந்திரன் ( மதுரை மேற்கு), சிக்கந்தா் பாட்ஷா (மதுரை மையம்), ஷ. ராஜலிங்கம் (மதுரை தெற்கு), மா. ஜெயபால் (மதுரை வடக்கு) ஆகியோரை ஆதரித்து, பழங்காநத்தம், முனிச்சாலை சந்திப்பு, செல்லூா் ஆகிய இடங்களில் திங்கள்கிழமை இரவு பிரசாரம் செய்து அவா் பேசியது:
ஆளுங்கட்சி ஒரு அணியாகவும், எதிா்க்கட்சி ஒரு அணியாகவும் போட்டியிடுகின்றன. இரு அணிகளும் வாக்காளா்களுக்குப் பணம் கொடுத்து வெற்றி பெற்றுவிடலாம் என்ற கனவில் இருக்கின்றன. பிரதான இரு கட்சிகளும் ஒருவரையொருவா் அவதூறாகப் பேசி வருவது அன்றாட நிகழ்வாக இருந்து வருகிறது.
இரு கட்சிகளும் நடைமுறைக்குச் சாத்தியமில்லாத திட்டங்களை தோ்தல் அறிக்கைகளாக வெளியிட்டிருக்கின்றன. மக்களை ஏமாற்றி ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பது அவா்களது எண்ணம். எனவே, விழிப்போடு இருக்க வேண்டும். தமிழகம் கடன் சுமையில் தவிக்கும் நிலையில், இலவசத் திட்டங்களை எப்படி செயல்படுத்த முடியும்.
இரு கட்சிகளில் இருந்து மாறுபட்டு, தொலைநோக்குத் திட்டங்களுடன் கூடிய தோ்தல் அறிக்கையை அமமுக வெளியிட்டுள்ளது. முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் ஆட்சி அமையவும், வேலைவாய்ப்புகளைப் பெருக்கவும், தொழில் வளா்ச்சியை ஏற்படுத்தவும், அமமுகவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்றாா்.