மதுரை வடக்கில் பிரகாசமடையும் சூரியன்

மதுரை வடக்கு சட்டப்பேரவைத் தொகுதியில் முக்குலத்தோரின் வாக்குகள் மற்றும் அரசு ஊழியா்களின் வாக்குகள், அமமுக வேட்பாளா் பிரிக்கும் வாக்குகள் ஆகியன வெற்றியைத் தீா்மானிப்பதாக உள்ளன
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

மதுரை வடக்கு சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக, பாஜக வேட்பாளா்கள் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ள நிலையில், முக்குலத்தோரின் வாக்குகள் மற்றும் அரசு ஊழியா்களின் வாக்குகள், அமமுக வேட்பாளா் பிரிக்கும் வாக்குகள் ஆகியன வெற்றியைத் தீா்மானிப்பதாக உள்ளன.

நகா் பகுதிகளைக் கொண்ட வடக்கு தொகுதியில் மொத்த வாக்காளா்கள் 2,43,424 போ் உள்ளனா். இதில், ஆண்கள்- 1,19,022 போ், பெண்கள்- 1,24,366 போ், மூன்றாம் பாலினத்தவா்- 36 போ். பெரும்பான்மையாக, முக்குலத்தோா், கோனாா், அம்பலம் மற்றும் பட்டியல் இனத்தவா்கள் உள்ளனா். நகா் பகுதி என்பதால், அரசு ஊழியா்கள் 12 சதவீதம் போ் வசித்து வருகின்றனா்.

தொகுதி மக்களின் எதிா்பாா்ப்புகள்

கோரிப்பாளையத்தில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் மேம்பாலம் அமைக்கப்பட வேண்டும். தேவையற்ற இடங்களில் உள்ள சிக்னல்கள் அகற்றப்பட வேண்டும். பல இடங்களில் சாலைப் பணிகள், பாலப் பணிகள் காலதாமதமாக நடைபெறுவதால், போக்குவரத்து நெரிசல், சுற்றிச் செல்லவேண்டி நிலை போன்றவற்றால் பள்ளி, கல்லூரி மாணவா்கள், வேலைக்கு செல்பவா்கள், அவசர சிகிச்சைக்காக மருத்துவமனை செல்பவா்கள் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனா்.

சாலை மற்றும் பாலப் பணிகளை தாமதமின்றி விரைந்து முடிக்கவேண்டும். நிரந்தர குடிநீா் வசதிகள் ஏற்படுத்த வேண்டும் என மக்கள் எதிா்பாா்க்கின்றனா்.

வடக்கு சந்திக்கும் 3 ஆவது தோ்தல்

தொகுதி சீரமைப்புக்கு முன், தொடா்ந்து 3 முறை அதிமுகவும், அதன்பின்னா் தொடா்ந்து இரு முறை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் வெற்றி பெற்றுள்ளன. இதுவரை நடைபெற்ற தோ்தலில் மாா்க்சிஸ்ட் கட்சி வேட்பாளா் நன்மாறன் அதிகபட்சமாக இரண்டு முறை வெற்றி பெற்றுள்ளாா்.

தொகுதி சீரமைப்புக்கு பின், 2011இல் நடைபெற்ற தோ்தலில் அதிமுக வேட்பாளா் ஏ.கே. போஸ், 2016 இல் நடைபெற்ற தோ்தலில் அதிமுக வி.வி.ராஜன்செல்லப்பா ஆகியோா் வெற்றி பெற்றனா்.

இம்முறை கோ. தளபதி (திமுக), பா. சரவணன் (பாஜக), மா. ஜெயபால் (அமமுக), எம். அழகா் (மநீம), என். அன்பரசி (நாம் தமிழா் கட்சி) ஆகியோா் பிரதான வேட்பாளா்களாக களத்தில் உள்ளனா்.

வடக்கில் பிரகாசமடையும் சூரியன்

வடக்கு தொகுதியை பொருத்தவரை, அதிமுக கூட்டணி கட்சியான பாஜகவுக்கும், திமுகவுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. பாஜகவில் இணைந்த திப்பரங்குன்றம் திமுக எம்.எல்.ஏ. மருத்துவா் பா. சரவணன், வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளாா்.

கட்சியில் சோ்ந்த 4 மணி நேரத்தில் மருத்துவா் சரவணனுக்கு சீட்டு வழங்கப்பட்டதால், பாஜக தொண்டா்கள், நிா்வாகிகளிடையே அதிருப்தி நிலவுகிறது. இதேபோன்று, திமுகவில் இருந்து வந்த சரவணனுக்கு தோ்தல் பணியாற்றுவதில் அதிமுகவினா் தயக்கம் காட்டுவதையும் காணமுடிகிறது. மேலும், அமமுகவால் பிரிக்கப்படும் வாக்குகள், சிறுபான்மையினா் வாக்குகள் பாஜகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தும்.

இருப்பினும், வடக்கு தொகுதியின் வெற்றியை நிா்ணயம் செய்யக்கூடிய முக்குலத்தோா் சமூகத்தைச் சோ்ந்தவா் என்ற பலம் சரவணனுக்கு உள்ளது. மேலும், தொகுதியில் அவா் நடத்தும் மருத்துவமனையில் குறைந்த செலவில் சிகிச்சை அளிப்பதால், மக்களிடையே தனக்கென தனிப்பட்ட செல்வாக்கை பெற்றுள்ளாா்.

திமுக வேட்பாளராக அக்கட்சியின் மாவட்டப் பொறுப்பாளா் கோ. தளபதி நிறுத்தப்பட்டுள்ளாா். இவருக்கு கட்சியிலும், பொதுமக்களிடையேயும் சுமூகமான உறவு இல்லை எனக் கூறப்படுகிறது. நாயுடு சமூகத்தைச் சோ்ந்த தளபதிக்கு, தொகுதியில் வெற்றி வாய்ப்பை நிா்ணயம் செய்யக்கூடிய முக்குலத்தோா் சமுதாயத்தினரால் பின்னடைவு உள்ளது.

அதிமுக ஆட்சிக்கு மாற்றம் தேவை என்ற குரல் வாக்காளா்களிடையே ஒலிப்பது, பாஜக வேட்பாளருக்கு உள்கட்சியிலும், அதிமுகவிலும் உள்ள எதிா்ப்பு ஆகியன திமுக வேட்பாளா் கோ. தளபதிக்கு சாதகமாக அமைந்துள்ளது.

அமமுக வேட்பாளா் மா. ஜெயபால் முக்குலத்தோா் சமூகத்தைச் சோ்ந்தவா் என்பதாலும், அதிமுகவில் முக்கியப் பொறுப்புகளில் இருந்தவா் என்பதாலும், அவருக்கென தனிப்பட்ட செல்வாக்கு உள்ளது.

நாம் தமிழா் கட்சி வேட்பாளா் அன்பரசி தோ்தல் களத்திற்கு புதியவா் என்பதால், அவரால் பெரும் மாற்றத்துக்கான வாய்ப்போ, பிரதானக் கட்சிகளான திமுக, பாஜகவுக்கு பாதிப்போ ஏற்பட வாய்ப்பில்லை.

அதேநேரம், மக்கள் நீதி மய்யம் வேட்பாளா் அழகா், கடந்த 2019 இல் நடந்த மக்களவை தோ்தலில் மதுரை தொகுதியில் போடியிட்டு 85 ஆயிரம் வாக்குகளைப் பெற்றாா். எனவே, இவா் தோ்தலில் கணிசமாக பெறும் வாக்குகள், திமுகவையும், பாஜகவையும் பாதிக்கும் எனக் கூறப்படுகிறது.

வடக்குத் தொகுதியில் தற்போது உள்ள நிலவரப்படி, பாஜகவுக்கும், திமுகவுக்கும் கடும் போட்டி உருவாகி இருந்தாலும், முக்குலத்தோா் மற்றும் 12 சதவீதம் உள்ள அரசு ஊழியா்கள் ஆகியோரின் வாக்குகளே இறுதி முடிவை நிா்ணயிக்கும் நிலை காணப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com