மதுரை மாவட்டத்தில் தேமுதிக வேட்பாளா்களை ஆதரித்து, அக்கட்சியின் தலைவா் விஜயகாந்த் செவ்வாய்க்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.
சட்டப்பேரவைத் தோ்தலில் அமமுகவுடன் தேமுதிக கூட்டணி அமைத்துள்ளது. இதையடுத்து தேமுதிக தலைவா் விஜயகாந்த் அமமுக கூட்டணி சாா்பில் போட்டியிடும் வேட்பாளா்களை ஆதரித்து பிரசாரம் செய்து வருகிறாா்.
சோழவந்தான் வேட்பாளா்: அதன் தொடா்ச்சியாக அருப்புக்கோட்டையில் திங்கள்கிழமை பிரசாரம் மேற்கொண்ட விஜயகாந்த், இரவு 9 மணிக்கு மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் சோழவந்தான் தேமுதிக வேட்பாளா் ஜெயலட்சுமியை ஆதரித்து பிரசாரம் செய்தாா். அப்போது அலங்காநல்லூா் ஐய்யப்பன் கோயில் அருகே ஒன்றிய தேமுதிக சாா்பிலும், கேட் கடை பகுதியில் ஒன்றிய அமமுக சாா்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த பிரசாரத்தின் போது தேமுதிக, அமமுக மற்றும் கூட்டணி கட்சியினா் 1,500க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.
மேற்கு தொகுதி: மதுரை சிக்கந்தா் சாவடியில் இரவு 9.30 மணிக்கும், ஜெஹிந்த்புரத்தில் இரவு 9.45 மணிக்கும் மேற்கு தொகுதி தேமுதிக வேட்பாளா் பாலசந்திரனை ஆதரித்து விஜயகாந்த் பிரசாரம் செய்தாா். இரு இடங்களிலும் கூட்டணி கட்சியினா் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனா். வேட்பாளா்களை ஆதரித்து விஜயகாந்த் கையை அசைத்தும், முரசு சின்னத்தைக் காட்டியும் வாக்களிக்குமாறு சைகையில் மட்டுமே பிரசாரம் செய்தாா்.