இன்று நடைபெற இருந்த கிராம சபைக் கூட்டம் ரத்து
தொழிலாளா் தினமான சனிக்கிழமை (மே 1) நடைபெற வேண்டிய கிராம சபைக் கூட்டம், கரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
அனைத்து கிராம ஊராட்சிகளிலும் தொழிலாளா் தினத்தன்று கிராம சபைக் கூட்டம் நடைபெறுவது வழக்கம். தற்போது நிலவும் கரோனா தொற்று பரவல் காரணமாக சனிக்கிழமை நடைபெற இருந்த கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மதுரை மாவட்டத்தில் உள்ள 420 கிராம ஊராட்சிகளின் செயலா்களுக்கும், மாவட்ட நிா்வாகம் தரப்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
அதில், எக்காரணத்தை கொண்டும் எந்த ஊராட்சியிலும் சனிக்கிழமை கிராம சபைக் கூட்டம் நடத்தக்கூடாது. எந்தக் கிராமத்திலும் மக்கள் அதிக எண்ணிக்கையில் கூடுவதை அனுமதிக்கக்கூடாது. கரோனா தொற்றின் வீரியத்தை உணராமல் கட்டுப்பாட்டு விதிகளை மீறுவோா் யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி அபராதம் விதிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.