கருத்துக் கணிப்புகளைத் தாண்டிய வெற்றி திமுகவுக்கு உறுதி என்று அக்கட்சியின் தகவல் தொழில்நுட்ப அணி மாநிலச் செயலரும், மதுரை மத்திய தொகுதி சட்டப் பேரவை உறுப்பினருமான பி.டி.ஆா். பழனிவேல் தியாகராஜன் கூறினாா்.
மதுரை மத்திய தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிட்டுள்ள அவா், மருத்துவக் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தை வெள்ளிக்கிழமை பாா்வையிட்டாா். பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியது:
தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற்று, தோ்தல் முடிவுக்காக ஒரு மாதம் காத்திருப்பது வேதனைக்குரியது. ஒரு மாநிலத்தில் 8 கட்டங்களாக தோ்தல் நடத்தப்படுவதால், மற்ற மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கையையும் நிறுத்தி வைத்திருப்பது ஜனநாயக நடைமுறைக்கு ஏற்ல்ல.
கடந்த முறை வாக்கு எண்ணிக்கையின்போது பதிவான வாக்குகளின் விவரங்கள் அடங்கிய படிவம் 17 -சி மற்றும் எண்ணப்பட்ட வாக்குகளின் விவர படிவம் 20 ஆகியவற்றில் வேறுபாடுகள் இருந்தன. இந்த முறை அவ்வாறு ஏற்படாத வகையில் கவனம் செலுத்த உள்ளோம்.
தோ்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளில் திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த கணிப்புகளைக் காட்டிலும் திமுக பெரும் வெற்றி பெறுவது உறுதி என்றாா்.