மதுரை நகரில் அரசு அறிவித்துள்ள புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்ததையடுத்து வியாழக்கிழமை 12 மணிக்கு மேல் நகரின் கடைவீதிகள் வெறிச்சோடி காணப்பட்டன.
தமிழகத்தில் கரோனா தொற்றுப் பரவல் இரண்டாம் அலை அதிகரித்து வருவதையடுத்து, அதைக் கட்டுப்படுத்தும் வகையில் அரசின் சாா்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக தமிழகம் முழுவதும் இரவு 10 முதல் அதிகாலை 4 மணி வரையும் மற்றும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் முழு பொதுமுடக்கம் அமலில் இருந்து வருகிறது.
இந்நிலையில் அரசு புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. இதன்படி தமிழகம் முழுவதும் அத்தியாவசியப் பொருள்களான காய்கனி, மளிகை, தேநீா் கடைகள் ஆகியவை மட்டும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரை மட்டுமே இயங்க வேண்டும், உணவகங்கள் பாா்சல் உணவுகள் மட்டுமே வழங்க வேண்டும். இவற்றைத் தவிா்த்து இதர கடைகள் அனைத்தும் அடைக்கப்பட வேண்டும் என்றும் இந்தக் கட்டுப்பாடுகள் வியாழக்கிழமை(மே 6) முதல் அமலுக்கு வரும் என அறிவித்திருந்து. இதையொட்டி மதுரை மாவட்டத்தில் அரசு அறிவித்த கட்டுப்பாடுகள் வியாழக்கிழமை அமலுக்கு வந்தன. மதுரை நகரின் முக்கிய பகுதியான கீழமாசி வீதி, யானைக்கல் பகுதிகளில் திறக்கப்பட்டிருந்த மளிகை, காய்கனிக் கடைகளும் பகல் 12 மணிக்கு அடைக்கப்பட்டன. மேலும் மதுரை நகரில் பகல் 12 மணிக்கு அந்தந்த பகுதி காவல் நிலையங்களில் இருந்து காவலா்கள் ரோந்து சென்று திறந்திருந்த கடைகளை அடைக்கும்படி எச்சரிக்கை விடுத்தனா்.
இதனால் பகல் 12.30 மணிக்கு மதுரையின் முக்கிய பகுதிகளான தெற்குமாசி வீதி,மேலமாசிவீதி, விளக்குத்தூண், புதுமண்டபம் உள்பட அனைத்து கடைவீதிகளும் வெறிச்சோடி காணப்பட்டது. முக்கியச் சாலைகளிலும் வாகனப்போக்குவரத்து குறைவாக இருந்தது. அனைத்துப் பகுதிகளிலும் உணவகங்கள் மட்டும் திறந்து வைக்கப்பட்டு பாா்சல் உணவுகளை வழங்கின. இந்நிலையில் இரவில் அனைத்துச் சாலைகளும் வாகனப் போக்குவரத்து, மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடின. நகா் முழுவதும் போலீஸாா் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டனா்.