வங்கிக் கடன் வட்டிக் குறைப்பு, மின்கட்டணச் சலுகை வழங்கப்படுமா?: தொழில் வா்த்தக சங்கம் எதிா்பாா்ப்பு
By DIN | Published On : 13th May 2021 11:19 PM | Last Updated : 13th May 2021 11:19 PM | அ+அ அ- |

சிறு, குறு நிறுவனங்களுக்கு வட்டிக் குறைப்பு, மின்கட்டணச் சலுகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு தொழில் வா்த்தக சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து அச் சங்கத்தின் தலைவா் என்.ஜெகதீசன் வெளியிட்டுள்ள அறிக்கை: கரோனா நோய்த் தொற்று காரணமாக ஏற்பட்டுள்ள பொதுமுடக்கத்தால் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் பெரிய அளவில் பாதிப்படைந்துள்ளன.
இதைக் கொண்டு, பல்வேறு சலுகைகளை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா்.
கரோனா முதல் அலை பொதுமுடக்கத்தின் தாக்கத்தால், பாதிக்கப்பட்ட சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களில் சுமாா் 25 சதவீதம் அளவுக்கு இன்னும் உற்பத்தியை தொடங்க முடியாமல் உள்ளன. சிரமத்திற்கிடையே தொழில் தொடங்கிய நிறுவனங்கள் தற்போது மீண்டு வரும் நிலையில் வழங்கப்பட்ட இந்த சலுகைகள் தொழில் நிறுவனங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.
கரோனா பொதுமுடக்கத்தால் அத்தியாவசியப் பொருள்களின் தயாரிப்பும், அதற்கான தேவையும் சற்றே குறைந்து, வணிகமும் பாதிப்படைந்துள்ளது. அதேநேரம், அனைத்து தொழிலாளா்களுக்கும் ஊதியம் வழங்க வேண்டிய கட்டாய நிலை உள்ளது. எனவே, சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் செலுத்த வேண்டிய வங்கிக் கடனுக்கான வட்டியை கணிசமாகக் குறைத்திடவும், தொழிற்சாலையின் மின் பயன்பாட்டிற்கு செலுத்த வேண்டிய நிரந்தர கேட்புக் கட்டணத்தில் சில சலுகைகளையும் அறிவிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.