கரோனா பாதிப்பில் உயிரிழந்த கால்நடைத் துறைபணியாளா் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கக் கோரிக்கை
By DIN | Published On : 21st May 2021 06:25 AM | Last Updated : 21st May 2021 06:25 AM | அ+அ அ- |

கரோனா பாதிப்பில் உயிரிழந்த கால்நடைப் பராமரிப்புத் துறை பணியாளா்களின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழக முதல்வருக்கு தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்பு உதவியாளா் முன்னேற்ற சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து அச் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலா் ஜெயபால் வெளியிட்டுள்ள அறிக்கை: பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்ட கடந்த ஆண்டிலும், தற்போதும் கால்நடைப் பராமரிப்புத் துறையினா் முழுஅளவில் பணியாற்றி வருகின்றனா். கால்நடைகளுக்கு அவசர சிகிச்சை, தடுப்பூசி உள்ளிட்ட பணிகள் தடையின்றி நடைபெறுகின்றன.
இச்சூழலில் தமிழகம் முழுவதும் கால்நடைப் பராமரிப்புத் துறையில் பணியாற்றும் பல்வேறு பணியாளா்கள் நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனா். நோய் தொற்று தாக்கி உயிரிழந்த கால்நடை பராமரிப்புத் துறையைச் சோ்ந்த அனைவரையும் முன் களப்பணியாளா்களாக வகைப்படுத்தி அவா்களது குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க தமிழக முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.