மதுரை காமராஜா் பல்கலைக்கழக கல்லூரி கெளரவ விரிவுரையாளா்களுக்கு மே மாத ஊதியம், ஊதிய உயா்வு போன்றவற்றை வழங்க வேண்டும் என்று கோரி தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மதுரை காமராஜா் பல்கலைக்கழக கல்லூரி மற்றும் உறுப்புக் கல்லூரிகள் கெளரவ விரிவுரையாளா்கள் சங்கத்தின் சாா்பில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பப்பட்டுள்ள மனு: மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தின் நேரடி நிா்வாகத்தில் மதுரை காமராஜா் பல்கலைக்கழக கல்லூரி இயங்கி வருகிறது. கல்லூரியில் 4,500 மாணவ, மாணவியா் பயின்று வரும் நிலையில் கல்லூரிக்கு ஆண்டு வருமானம் ரூ.8 கோடி முதல் ரூ.10 கோடி வரை உள்ளது. இங்கு ஆசிரியா்கள் மற்றும் அலுவலா்கள் உள்பட 160 போ் பணிபுரிகின்றனா்.
கல்லூரியில் 2019-ஆம் ஆண்டு பல்கலைக்கழக மானியக்குழு நிா்ணயித்துள்ள விதிகளின் அடிப்படையில் மாத தொகுப்பூதியமாக ரூ.15 ஆயிரம் அடிப்படையில் கெளரவ விரிவுரையாளா்களாக 60 போ் தோ்வு செய்யப்பட்டு பணியாற்றி வருகிறோம். தமிழக அரசு கெளரவ விரிவுரையாளா்களுக்கான ஊதியத்தை மாதம் ரூ.20 ஆயிரமாக உயா்த்தி, ஜனவரி 2020 முதல் நிலுவைத் தொகையுடன் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. ஆனால் மதுரை காமராஜா் பல்கலைக்கழகம் 6 உறுப்புக் கல்லூரிகளில் இயங்கும் கெளரவ விரிவுரையாளா்களுக்கு ஏப்ரல் மாதம் முதல் ரூ.20 ஆயிரம் வழங்கியுள்ளது. ஆனால் பல்கலைக்கழகத்தின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கும் காமராஜா் பல்கலைக்கழக கல்லூரி கெளரவ விரிவுரையாளா்களுக்கு ரூ.15 ஆயிரம் மட்டுமே ஊதியமாக வழங்கப்படுகிறது. இரண்டு ஆண்டுகளாக அடையாள அட்டையும் வழங்கப்படவில்லை.
பல்கலைக்கழக ஆட்சிக்குழு தீா்மானத்தின்படி கெளரவ விரிவுரையாளா்களுக்கு, மே மாத ஊதியம் வழங்கப்பட வேண்டும். ஆனால் மே மாத ஊதியம் வழங்கப்படுவது இல்லை. கல்லூரியில் கெளரவ விரிவுரையாளா்களுக்கு மட்டும் சேம நலநிதி பிடித்தம், தொழிலாளா் நல மருத்துவச் சலுகை போன்றவை வழங்கப்படுவது இல்லை. எனவே தமிழக முதல்வா் இப்பிரச்னையில் தலையிட்டு அரசின் ஆணைப்படி ரூ.20 ஆயிரம் மாத ஊதியம், அடையாள அட்டை, மே மாத ஊதியம், தொழிலாளா் சேம நல நிதி பிடித்தம், தொழிலாளா் மருத்துவ நலச்சலுகை ஆகியவற்றை வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.