தூங்கா நகரம் என அழைக்கப்படும்் மதுரை நகரம் தளரவற்ற பொது முடக்கம் காரணமாக திங்கள்கிழமை ஆள்நடமாட்டம் போக்குவரத்து இல்லாமல் முடங்கியது.
தமிழகத்தில் கரோனா இரண்டாவது அலையின் தீவிரம் காரணமாக தொற்று பரவல் வேகம் எடுத்து வருகிறது. இதையடுத்து கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் தளர்வற்ற பொநுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து மதுரையில் பெரும்பாலான முக்கிய சாலைகள் அனைத்தும் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது.
கீழமாசி வீதி, கீழமாரட் வீதி, நெல்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கணக்கான மளிகைக் கடைகள் உள்ளன. இதேபோல சிம்மக்கல் யானைக்கல் வடக்கு மாசி வீதி ஆகிய பகுதிகளில் பழ மண்டிகள் கீழ மாரட் வீதியில் வெங்காய மண்டி உள்ளன. இதனால் இப்பகுதியில் எப்போதும் வாகன நெரிசல் மிகுந்து காணப்படும்.
பொது பொது முடக்கம் காரணமாக கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டதால் வீதிகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டன. அதேபோல வாகன நெரிசல் மிகுந்து காணப்படும் கோரிப்பாளையம் சந்திப்பு, காளவாசல் சந்திப்பு, பெரியார் நிலையம் உள்ளிட்ட பகுதிகளும் வெறிச்சோடி இருந்தன.
மருத்துவமனை உள்ளிட்ட அவசரத் தேவைகளுக்காக செல்வோர் மட்டும் வாகனங்களில் சென்று வந்த வண்ணம் உள்ளனர். மதுரை மாநகர் எல்லையிலும் மாவட்ட எல்லையிலும் போலீசார் சோதனைச் சாவடிகளை அமைத்து அனுமதியின்றி வரும் வாகனங்களை திருப்பி அனுப்பினர்.